குற்ற வழக்கு ஒன்றில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என ஜாகிர் உசேனின் தந்தை இப்ராஹீம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'என்னுடைய மகன் ஜாகிர் உசேன் காவல்துறையால் கைது செய்யப்பட்ட பொழுது இடது காலிலும், வலது கையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவருக்கு உடனடியாக உரிய சிகிச்சை வழங்க வேண்டும். இதற்கான உத்தரவை புழல் சிறை நிர்வாகத்திற்கு நீதிமன்றம் கொடுக்க வேண்டும்' என தெரிவித்திருந்தார்.

இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 'கைது செய்யப்பட்டவருக்கு எப்படி காயம் ஏற்பட்டது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அரசு வழக்கறிஞர், 'ஜாகீர் உசேன் கழிவறையில் வழுக்கி விழுந்ததாகவும், உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. எனவே மேல் சிகிச்சை தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: TEAM INDIA.. 140 கோடி இந்தியர்களின் விருப்பம்.. முதலமைச்சர்கள் மத்தியில் பிரதமர் மோடி HINT..!

அப்பொழுது குறிப்பிட்ட நீதிபதிகள், 'தமிழக காவல் நிலையங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டும் வழிக்கு விழும் வகையில் கழிவறைகள் உள்ளதா? ஏன் குற்றவாளிகள் மட்டும் காயமடைகின்றனர். அந்த நிலையில்தான் கழிவறைகள் உள்ளதா?' எனக் கேள்வி எழுப்பினர். காவல் நிலைய கழிவறைகளை காவல் ஆய்வாளர்களும் பயன்படுத்துகிறார்கள் என்றால் ஏன் அவர்கள் மட்டும் வழுக்கி விழ வில்லை எனக் கேள்வி எழுப்பினர்.

'சம்பந்தப்பட்ட காவலர்கள் பணியை இழக்கும் நிலை ஏற்படும். பாதிக்கப்பட்ட மனுதாரரின் மகன் ஜாகிர் உசேனுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும்' என புழல் சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர். இந்த நிலையில் காவல் துறை அத்துமீறலை கண்டுகொள்ளாமல், தமிழக சட்டம் - ஒழுங்கை சீரழிய விடும் முதல்வர் ஸ்டாலின், ஆட்சியின் இறுதி ஆண்டிலாவது தன் பொறுப்புணர்ந்து, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
இரும்புக்கரம் கொண்டு குற்றங்களை அடக்கும் போர்வையில், காவல் துறையின் மிருகத்தனமான அத்துமீறல்களும், 'லாக் அப்' மரணங்களும் தான் தி.மு.க., ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 2024 ஜனவரி முதல் அக்., வரை சென்னை புழல் சிறையில், 304 கைதிகளுக்கு எலும்பு காயங்கள் ஏற்பட்டதற்கு, வழுக்கும் கழிப்பறைகளே காரணம் என தி.மு.க., அரசால் சாக்கு சொல்லப்பட்டது.

கடந்த 2022ல், உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங், ஐந்து குற்றவாளிகளின் பற்களை உடைத்து அத்துமீறலில் ஈடுபட்டபோது, தி.மு.க., அரசு கண்மூடி வாய் பொத்தி இருந்தது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே, 109 லாக் அப் மரண வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும், போலீசாரின் வன்முறையால் காவல் நிலையத்தில் வைத்தே, 2022ல் சென்னையில் 25 வயது இளைஞர்; திருவண்ணாமலையில் 47 வயது நபர்; 2023ல் தென்காசியில் 23 வயது தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்டனர்.
இவ்வாறு, காவல் துறையின் அத்துமீறல் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. மறுபுறம், போதை பொருள் துஷ்பிரயோகம், பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் ஜாதி வன்முறை என, குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இப்படி எல்லாம் சட்டம் - ஒழுங்கு தமிழகத்தில் சந்தி சிரிக்க காரணம், காவல் துறையை தி.மு.க., தன் சொந்த ஏவல் வேலைகளுக்கு பயன்படுத்துவது தான் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

முதலமைச்சர் முக.ஸ்டாலின் இனியாவது காவல் துறை மற்றும் குற்றவாளிகளின் அத்துமீறல்களை அடக்கி, சட்டம் - ஒழுங்கை சீர்செய்வாரா என்பதே, மக்களிடம் எஞ்சியிருக்கும் கடைசி எதிர்பார்ப்பு.எனவே, மேடைதோறும், 'அமைதிப்பூங்கா தமிழகம்' என முழங்குவதில் மட்டும் ஆர்வம் காட்டும் தி.மு.க., அரசு, முதலில் தமிழக மக்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க முனைய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மனசு வைப்பாரா பிரதமர் மோடி? நிதி ஆயோக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள்..!