டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பிப்ரவரி 15-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்தியா vs பாகிஸ்தான் இடையிலான மெகா போட்டி நடைபெறுமா என்ற சஸ்பென்ஸ் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இது குறித்த தனது இறுதி முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) அடுத்த 24 மணி நேரத்தில் அறிவிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் ஐசிசி (ICC) துணைத் தலைவர் இம்ரான் கவாஜா, பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாம் ஆகியோர் இடையே சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக அவசர ஆலோசனை நடைபெற்றது. இந்தப் போட்டி ரத்தானால் ஐசிசி மற்றும் ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு சுமார் 250 மில்லியன் டாலர் (சுமார் ₹2,200 கோடி) வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால், சமரச முயற்சியில் ஐசிசி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிராக விளையாடப் பாகிஸ்தான் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஐசிசி-யின் வருவாயில் பாகிஸ்தானுக்குக் கூடுதல் பங்கு வழங்கப்பட வேண்டும். இந்தியாவுடன் மீண்டும் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களைத் தொடங்க ஐசிசி உறுதி அளிக்க வேண்டும். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் விளையாட மறுத்த வங்கதேச அணிக்குப் பதிலாக ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டதற்குப் பாகிஸ்தான் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

இதையும் படிங்க: "பழிதீர்க்குமா இந்தியா?" - நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் இன்று தொடக்கம்!
தனது நாட்டின் அரசு அனுமதி வழங்காததால் இந்தப் போட்டியைப் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் 'ஃபோர்ஸ் மெஜூர்' (தவிர்க்க முடியாதக் காரணி) விதியைக் குறிப்பிட்டுள்ளது. ஆனால், பாகிஸ்தான் தனது மற்ற லீக் போட்டிகளை இலங்கையில் விளையாடும் நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒரு போட்டியை மட்டும் புறக்கணிப்பதற்கு இந்த விதி பொருந்தாது என ஐசிசி விளக்கம் கேட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) ஏற்கனவே பாகிஸ்தானுக்குக் கடிதம் எழுதி, இந்தப் போட்டி ரத்தானால் தங்களுக்குப் பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்படும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது. ஐசிசி-யின் கடும் அபராத நடவடிக்கைகள் மற்றும் நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, பாகிஸ்தான் தனது நிலையில் இருந்து இறங்கி வந்து போட்டி நடத்தப் பச்சைக்கொடி காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அவர்களின் ஒப்புதலுக்குப் பிறகு, மொஹ்சின் நக்வி இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் இறுதி முடிவை அறிவிப்பார்.
இதையும் படிங்க: இந்தியா - நியூஸிலாந்து 2வது ஒருநாள் போட்டி: ராஜ்கோட்டில் ராகுல் சதம் வீண்; நியூஸிலாந்து அபார வெற்றி!