தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக ரசிகர்களின் பேராதரவை பெற்று வந்த விஜய், அரசியலில் முழுநேர கவனம் செலுத்துவதற்காக சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்த பிறகு, அவரது கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஒரு நடிகராக பல சாதனைகளை படைத்த அவர், தற்போது அரசியல் பயணத்தை தேர்வு செய்து மாநிலத்தின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரது திரைப்பயணத்திற்கும் அரசியல் வாழ்க்கைக்கும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவான 'ஜன நாயகன்' திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. விஜய் நடித்த கடைசி திரைப்படம் என்பதாலேயே இந்த படத்திற்கு தனித்துவமான முக்கியத்துவம் கிடைத்தது. வெளியீட்டுக்கு முன்பு தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான தாமதம் உள்ளிட்ட சில சிக்கல்கள் ஏற்பட்டதாக பேசப்பட்டாலும், இறுதியில் படம் உலகம் முழுவதும் ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்புடன் திரையரங்குகளில் வெளியானது.
படம் வெளியான முதல் நாளிலேயே தமிழகம் மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடினர். அதிகாலை காட்சிகளிலிருந்தே திரையரங்குகள் ரசிகர்களின் ஆரவாரத்தால் களைகட்டின. சமூக வலைதளங்களிலும் 'ஜன நாயகன்' திரைப்படம் தொடர்பான பதிவுகள் தொடர்ந்து டிரெண்டாகி வருகின்றன. இந்த சூழலில், விஜய்யுடன் பல வெற்றிப் படங்களில் இணைந்து நடித்த நடிகை ஸ்வாதி வெளியிட்டுள்ள உணர்ச்சிகரமான பதிவு தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: 'காதலுக்கு மரியாதை' படத்தில் தொடங்கிய பாசம்..!! miss you விஜய் அண்ணா.. இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் வருண் சக்கரவர்த்தி உருக்கம்..!
தமிழ் சினிமாவில் 1995-ஆம் ஆண்டு இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான 'தேவா' திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஸ்வாதி. அந்த படத்தில் விஜய் கதாநாயகனாக நடித்திருந்தார். அறிமுகப் படமே வெற்றிபெற்றதால் ஸ்வாதிக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதன்பிறகு தனது இரண்டாவது தமிழ்ப் படமாக அஜித்துடன் 'வான்மதி' திரைப்படத்தில் நடித்தார். அந்த படமும் அவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. தொடர்ந்து விஜய்யுடன் 'வசந்த வாசல்', 'செல்வா' உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்த அவர், குடும்பக் கதைகளை மையமாகக் கொண்ட பல படங்களில் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
பின்னர் சினிமாவில் இருந்து படிப்படியாக விலகிய ஸ்வாதி, கடைசியாக 2009-ஆம் ஆண்டு வெளியான 'யோகி' திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு திரைப்படங்களில் அதிகம் நடிக்காமல், சின்னத்திரை தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், 'ஜன நாயகன்' திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படங்களை பகிர்ந்து, மிகவும் உணர்ச்சிகரமான ஒரு நீண்ட பதிவை ஸ்வாதி வெளியிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
அந்த பதிவில், "தளபதி விஜய்யுடனான பழைய நினைவுகளை மீண்டும் பார்க்கும்போது, அது உண்மையிலேயே ஒரு பொக்கிஷத்தை கண்டுபிடித்தது போன்ற உணர்வை தருகிறது. என்னுடைய பழைய புகைப்பட ஆல்பங்களை பார்த்தபோது இந்த அழகான நினைவுகள் மீண்டும் மனதில் தோன்றின. சில தருணங்கள் காலம் கடந்தாலும் ஒருபோதும் அழியாது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது முதல் திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்ததை நினைவுகூர்ந்த அவர், "என்னுடைய முதல் படத்தில் உங்களுடன் இணைந்து நடித்ததில் தொடங்கி, உங்களின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' வெளியாகும் வரையிலான இந்த நீண்ட திரைப்பயணத்திற்கு என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துகள். இந்த மிகப்பெரிய வெற்றிக்காக மனமார்ந்த பாராட்டுகள்" என்று தெரிவித்துள்ளார்.

விஜய்யின் திரைப்பயணம் மட்டுமல்லாமல், அவரது அரசியல் பயணத்தையும் ஸ்வாதி தனது பதிவில் பாராட்டியுள்ளார். "ஒரு நடிகராக இருந்து இன்று முதல்-அமைச்சராக உயர்ந்துள்ள உங்களின் பயணம் பலருக்கும் மிகப்பெரிய உத்வேகமாக இருக்கிறது. உங்களது வெற்றி என்பது கடின உழைப்பு, விடாமுயற்சி, தோல்விகளில் இருந்து மீண்டு எழும் மனவலிமை ஆகியவற்றின் பிரதிபலிப்பாகும். எண்ணற்ற சவால்களை சந்தித்த போதும் நீங்கள் ஒருபோதும் பின்னடைவு அடையவில்லை. இன்று மிகப்பெரிய பொறுப்பை ஏற்றுள்ளீர்கள்" என்று அவர் கூறியுள்ளார்.
அவரது பதிவில் அதிகம் கவனம் பெற்ற வரிகள், "திரையில் முழுமையான என்டர்டெயினராக இருந்த நீங்கள், இன்று மக்களுக்காக உங்களை அர்ப்பணித்துள்ளீர்கள். திரைத்துறையிலும், அரசியலிலும் மிளிருவது சாதாரண சாதனையல்ல. ரீல் நாயகனில் இருந்து (ரியல்) நிஜமான தலைவனாக புதிய எடுத்துக்காட்டாக மாறியுள்ளீர்கள்" என்ற கருத்துதான். இந்த வரிகளை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.
அதோடு, "இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்கு மனமார்ந்த வாழ்த்துகள் முதல்வர் சார். உங்கள் புதிய வாழ்க்கையிலும் வெற்றிகள் தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். உங்களை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்ல ஆவலாக காத்திருக்கிறேன். என்னுடைய நண்பர்களும், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களும் நான் எப்போது உங்களை சந்திப்பேன் என்று கேட்டு வருகின்றனர். அந்த நாள் விரைவில் வரும் என்று நம்புகிறேன். எப்போதும் உங்களுக்கு எனது மரியாதையும் வாழ்த்துகளும் இருக்கும்" என்றும் ஸ்வாதி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்வாதியின் இந்த பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அதற்கு லைக் மற்றும் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். குறிப்பாக விஜய்யுடன் அவர் நடித்த பழைய திரைப்படங்களின் புகைப்படங்கள் ரசிகர்களிடம் பழைய நினைவுகளை மீட்டெடுத்துள்ளன. "தேவா", "வசந்த வாசல்", "செல்வா" போன்ற படங்களை நினைவுகூர்ந்து ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
ஒரு காலத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த நடிகை, பல ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த நட்பையும் மரியாதையையும் மறக்காமல் பகிர்ந்திருப்பது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. திரைத்துறையில் தொடங்கிய ஒரு கலைஞரின் பயணம், அரசியல் தலைவராக மாறியுள்ள தற்போதைய நிலை வரை தொடர்ந்திருப்பதை தனது வார்த்தைகளின் மூலம் ஸ்வாதி அழகாக பதிவு செய்திருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஒருபுறம் 'ஜன நாயகன்' திரைப்படம் ரசிகர்களின் வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் விஜய்யின் நீண்டகால திரைப்பயணத்தை நினைவுகூர்ந்து நடிகை ஸ்வாதி வெளியிட்டுள்ள இந்த உணர்ச்சிகரமான பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக, "ரீல் நாயகனில் இருந்து நிஜமான தலைவனாக மாறியுள்ளீர்கள்" என்ற அவரது வரிகள், விஜய் ரசிகர்களிடையே அதிகம் மேற்கோள் காட்டப்படும் வாசகமாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: கவர்ச்சியோ.. கிளாமரோ.. உங்களை நாங்க ஹேப்பியா வச்சிக்கிறோம்..!! பின் ஏன்..? எங்களை மட்டும் திட்டுறீங்க - நடிகை தமன்னா பளிச் பேச்சு..!