இலங்கையில் இருந்து தமிழகத்தை தேடி வரும் ஈழத்தமிழர்களின் வாழ்க்கை முறையை சொல்லும் சிறந்த படமாக இருப்பது தான் டூரிஸ்ட் ஃபேமிலி படம். இந்த படத்தை பார்த்து விட்டு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரனின் நடிப்பு பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. மேலும் இப்படத்தில் முரளி என்ற கேரக்டரில் வரும் கமலேஷுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

24 வயதே ஆன இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனது முழு திறமையையும் இப்படத்தில் காண்பித்துள்ளார் என்றே சொல்லலாம். இலங்கை தமிழர்களின் வாழ்க்கையை நகைச்சுவையாக எடுத்து மக்கள் மத்தியில் கொண்டு சென்ற அவருக்கு இலங்கை தமிழ் மக்களும் தங்களது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெறிவித்து வருகின்றனர். படம் வந்ததிலிருந்து பலரது பாராட்டுகளை மட்டுமே பெற்று வரும் நிலையில் படத்தை குறித்து பல பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கோடை விடுமுறை முடிவில் டூருக்கு போலாமா...? இப்பொழுது ஓடிடியில் வந்தாச்சு "டூரிஸ்ட் ஃபேமிலி"..!

அதன்படி, மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் தான் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. பல ஆக்ஷன் படங்கள் மட்டுமே சமீப நாட்களாக சினிமாவில் வந்து கொண்டிருக்க, தியேட்டர்கள் வருவதையே தவிர்த்த பல குடும்ப ஆடியன்ஸை மீண்டும் தியேட்டருக்கு வரவழைத்தது இந்த டூரிஸ்ட் ஃபேமிலி படம்.

இப்படிப்பட்ட இந்த படம் மனித நேயத்தை குறிக்கும் படமாக உள்ளது. குறிப்பாக இந்த படத்தை பார்த்த சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசுகையில், "நேரம் கிடைக்கும் போதெல்லாம் தியேட்டர்களில் படம் பார்க்கும் இயல்புடைய நான் இன்று மதியம் குடும்பத்தினருடன் சென்று டூரிஸ்ட் ஃபேமிலி படம் பார்த்தேன். இந்த படம் என் மனதை மிகவும் ஈர்த்தது. இப்பொழுது இருக்கும் காலக்கட்டத்தில் அக்கம் பக்கத்தினருடன் மக்கள் பேசி பழகும் நடைமுறை முழுவதுமாக குறைந்து உள்ள நிலையில், வீடுகளில் தங்கள் அருகில் வசிப்பவருடனும் மனிதாபிமான உறவோடும் அன்புடனும் வாழும் வாழ்க்கையை மக்களுக்கு தெளிவாக போதிக்கிறது இப்படம்" என புகழாரம் சூட்டினார்.

இப்படி பட்ட திரைப்படத்தில் சசிகுமாரின் மூத்த மகன், இலங்கையில் இருந்து இந்தியா வந்த பின் தனது காதலிக்கு கட்டாய திருமணம் செய்து விட்டார்கள் என கூறி வருத்தப்பட்டு, அந்த காதலியின் கல்யாண நடன வீடியோவை காண்பிப்பான். அதில் காதலி, 'மம்முட்டியான்' பாடலுக்கு நடனமாடி இருப்பார். இதனை பார்த்த சசிகுமார் மகன், இனி அந்த பாட்டை கேட்டாலே அவள் நியாபகம் தான் வரும் என சொல்லி அழ, உடனே சசிகுமாரின் இளைய மகன் அதே பாடலுக்கு நடமாடி, இனி இந்த மம்முட்டியான் பாடலை கேட்டால் உனக்கு என் நியாபகம் தான் வரும் என தெரிவிக்க, பின் அப்பா, மகன்கள் மூவரும் இந்த பாடலுக்கு நடனம் ஆடி இருப்பர். இந்த படத்தின் மிகவும் அற்புதமான காட்சியென்றாலே அது தான்.

இப்படி இருக்க, மம்முட்டியான் படத்தை இயக்கி, தயாரித்த நடிகர் தியாகராஜன் சமீபத்தில் தனியார் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் டூரிஸ்ட் பேமிலி படத்தில் பயன்படுத்தப்பட்ட மம்முட்டியான் பாடலை குறித்து பேசியிருந்தார். அதில், டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் மம்முட்டியான் பாடலை பயன்படுத்த தன்னிடம் முறையாக அனுமதி வாங்கவில்லை என்பதால் பலரும் என்னிடம் வந்து எப்படி உங்கள் அனுமதி இல்லாமல் பாட்டு போடலாம். இதனை சும்மா விடக்கூடாது முறையாக வழக்கு போட்டு, காசு கேளுங்கள் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் உண்மையில் எனக்கு அப்படி எதுவுமே தோன்றவில்லை.காரணம் அந்தப் பாடல் மீண்டும் ஹிட் ஆனது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தான். அதலால் உண்மையில் அந்த பாட்டை அனைவரிடமும் மீண்டும் கொண்டு சேர்த்த இயக்குனருக்கு நான் தான் காசு கொடுக்க வேண்டும்" என்று கூறினார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள், அடடா...பாட்டு போட்டதும் நன்றி சொன்ன தியாகராஜன் எங்க.. பாட்ட தொட்டாலே கரண்ட் ஷாக் கொடுக்கும் இளையராஜா எங்க என பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ரசிகர்களின் ஹைப்பை எகிறவிட்ட சசிகுமாரின் அடுத்த படம்..! true story என்பதால் மக்கள் கொண்டாட்டம்..!