தமிழ் சினிமாவில் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிய நடிகர் ரவி மோகன், சமீப காலமாக திரைப்படங்களை விட தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விஷயங்களால் அதிகம் பேசப்பட்டு வருகிறார். ஒருகாலத்தில் அமைதியான, சர்ச்சைகளில் சிக்காத நடிகராக அறியப்பட்ட அவர், தற்போது குடும்ப பிரச்சினைகள், உறவு தொடர்பான செய்திகள் மற்றும் பல்வேறு விவாதங்களுக்கு மத்தியில் இருந்து வருகிறார்.
ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பல ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் இருந்த இந்த ஜோடி, தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான தம்பதியாக பார்க்கப்பட்டனர். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிவதாக ரவி மோகன் வெளியிட்ட அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த அறிவிப்பில், எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ஆர்த்தியிடமிருந்து பிரிவதாக ரவி மோகன் தெரிவித்திருந்தார். இதன் பின்னர் இரு தரப்பிலும் பல்வேறு கருத்துகள் வெளியானது. குறிப்பாக, இந்த பிரிவு தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல விவாதங்கள் நடைபெற்றன. ஆர்த்தி தரப்பில் சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டாலும், பிரிவு முடிவில் ரவி உறுதியாக இருந்ததாக செய்திகள் வெளியாகின. தற்போது இந்த விவகாரம் சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் விரைவில் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.
இதையும் படிங்க: கடைசி வரை திக்..திக்..!! மெஸ்ஸியின் மாயாஜாலத்தால் உயிர் தப்பிய அர்ஜென்டினா.. துள்ளி குதித்த நடிகர் ஐ.எம். விஜயன்..!
இதற்கிடையில், ரவி மோகனின் பெயர் பின்னணி பாடகி கெனிஷா பிரான்சிஸ் உடன் இணைத்து பேசப்பட்டது. இருவரும் நெருக்கமாக இருப்பதாகவும், ஒரே வீட்டில் வசிப்பதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகின. ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனம் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் கெனிஷா முக்கிய பங்காற்றியதாக கூறப்பட்டது. இதனால், இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற பேச்சுகளும் எழுந்தன.

ஆனால், அந்த உறவும் தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. கடந்த மாதம் வெளியிட்ட வீடியோ ஒன்றில் கெனிஷா, ரவி மோகனின் குடும்பத்தை தான் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்றும், அவரிடமிருந்து விலகுவதாகவும் தெரிவித்ததாக கூறப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலான கவனத்தை பெற்றது.
அதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் செய்தியாளர்களை சந்தித்து தனது மனநிலையைப் பற்றி உருக்கமாக பேசியிருந்தார். அந்த சந்திப்பில் அவர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்ட சம்பவமும் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும், தனக்கு எதிராக சிலர் எதிர்மறையான சக்திகளை பயன்படுத்தியதாக அவர் தெரிவித்த கருத்துகளும் விவாதத்தை ஏற்படுத்தின.
இதற்கிடையில், கெனிஷா விலகியதற்கு சமூக வலைத்தளங்களில் ஏற்பட்ட விமர்சனங்களே காரணமாக இருக்கலாம் என்ற கருத்துகளும் பரவின. குறிப்பாக, ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தரப்பிலிருந்து வந்த விமர்சனங்கள் காரணமாக கெனிஷா இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் சிலர் கூறினர். ஆனால், இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் தரப்பில் முழுமையான விளக்கம் வெளியாகவில்லை.
ரவி மோகனை பொறுத்தவரை, இந்த தொடர் பிரச்சினைகளுக்குப் பிறகு ஆன்மீகத்தில் அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. மன அமைதியை தேடி அவர் கோயில்களுக்கு சென்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், சமீபத்தில் ரவி மோகன் தொடர்பாக மற்றொரு சர்ச்சையும் எழுந்தது. அவரது வீட்டில் பணிபுரிந்த சிலர் மீது திருட்டு புகார் அளிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் காணாமல் போனதாக கூறி, பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், காவல்துறை விசாரணையில் குற்றச்சாட்டு தொடர்பான விவரங்கள் தெரியவந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இவ்வாறு தொடர்ந்து தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வந்த ரவி மோகன், தற்போது மீண்டும் சினிமாவில் முழு கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார். ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், தனது வாழ்க்கையின் கடந்த சில ஆண்டுகள் குறித்து மனம் திறந்தார். “எனக்கு இந்த வருடம் 46 வயது ஆகப்போகிறது. அதில் 23 வருடங்கள் சினிமாவில் இருந்திருக்கிறேன். இத்தனை ஆண்டுகளில் நான் செய்த ஒரு சிறிய தவறு கூட உங்களை காயப்படுத்தியுள்ளது. எனது தனிப்பட்ட வாழ்க்கையில் கொஞ்சம் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன்” என்று அவர் கூறினார்.
மேலும், “அதன்பிறகு சினிமா துறையில் இருப்பவர்கள் என்னிடம் வந்து, ‘நீ எதை வேண்டுமானாலும் சொல், நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் சினிமாவை விட்டு போய்விடுவேன் என்று மட்டும் சொல்லாதே’ என்று கூறினார்கள். அந்த வார்த்தைகளை நான் வேத வாக்காக எடுத்துக் கொண்டேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “சினிமாவுக்கும், என்னை நேசிக்கும் ரசிகர்களுக்கும் நான் எப்போதும் துரோகம் செய்ய மாட்டேன். மீண்டும் வந்து கொண்டிருக்கிறேன். எனக்கு நம்பிக்கை கொடுத்த அனைவருக்கும் நன்றி. பலரும் தற்போது மனநலம் குறித்து பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது. என் புதிய வாழ்க்கை தொடங்குகிறது” என்று கூறினார். ரவி மோகனின் இந்த பேச்சு அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த கால சர்ச்சைகளை கடந்து, மீண்டும் திரைப்படங்களில் தனது கவனத்தை செலுத்த வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஒரு நடிகரின் வாழ்க்கையில் வெற்றியும், தோல்வியும், தனிப்பட்ட சவால்களும் இயல்பானவை. ஆனால், அந்த சவால்களை எதிர்கொண்டு மீண்டும் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதே முக்கியம் என்பதை ரவி மோகனின் தற்போதைய பயணம் காட்டுகிறது. இனி வரும் காலங்களில் அவரது திரைப்படப் பயணம் எப்படி அமையும் என்பதே ரசிகர்கள் மத்தியில் உள்ள மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
இதையும் படிங்க: என்ன நடந்தாலும் புருஷா உன்னை விடமாட்டேன்..!! இவ்வளவு நடந்து மாதம்பட்டி ரங்கராஜை விட்டுக்கொடுக்காத முதல் மனைவி..!