புது டெல்லி: வெளிநாடுகளில் இருந்து வெள்ளி இறக்குமதியை நிபந்தனைகளுக்கு உட்படுத்தி மத்திய அரசு முக்கிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இந்தப் புதிய நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி மீதான வரியை மத்திய அரசு 15 சதவீதமாக உயர்த்தியது. இதில் 10 சதவீதம் அடிப்படை சுங்க வரியாகவும், 5 சதவீதம் வேளாண் உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரியாகவும் அமைந்துள்ளது. நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பைப் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த முடிவு பொருளாதார வல்லுநர்களால் வரவேற்கப்பட்டது.
இந்நிலையில், வெள்ளிக்கட்டிகள் இறக்குமதியில் மேலும் கடுமையான கட்டுப்பாடுகளை மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 99.9 சதவீத தூய்மையான வெள்ளிக்கட்டிகள் (Silver Bars) இதுவரை தடையற்ற இறக்குமதிப் பிரிவில் இருந்தன. இப்போது அவை கட்டுப்படுத்தப்பட்ட பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளன. மற்ற முக்கிய வெள்ளிப் பொருட்களும் இந்தப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: தொடர் சரிவில் தங்கம், வெள்ளி விலை..!! பெண்கள் ஹேப்பியோ ஹேப்பி..!!
இதனால், வெள்ளி இறக்குமதி செய்ய விரும்புவோர் மத்திய அரசிடம் முன் அனுமதி (License) பெற வேண்டும். இல்லையெனில் இறக்குமதி செய்ய முடியாது. இந்த நடவடிக்கை உள்நாட்டு வெள்ளி உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் என்றும், அன்னிய செலாவணி வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தங்கம் மற்றும் வெள்ளிக்கான வரி உயர்வு மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் ஆகியவை சர்வதேச சந்தையில் விலை ஏற்ற இறக்கம் மற்றும் உள்நாட்டுப் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவுகள் எனக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை நாட்டின் தங்கம்-வெள்ளி இறக்குமதியை சீர்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் நகைத் தொழில்துறை, முதலீட்டாளர்கள் மற்றும் வெள்ளி சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளோர் மத்தியில் கலவையான எதிர்வினை ஏற்பட்டுள்ளது. சிலர் இது உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் என்று வரவேற்க, மற்றவர்கள் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்று அஞ்சுகின்றனர்.
மத்திய அரசின் இந்த இரட்டை நடவடிக்கைகள் (வரி உயர்வு + உரிமக் கட்டுப்பாடு) இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அப்படியே யூடர்ன் போட்ட தங்கம், வெள்ளி விலை..!! இன்றைய நிலவரம் என்ன தெரியுமா..??