புதுடெல்லி: பிரான்ஸ் நாட்டிடமிருந்து 114 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான தீவிர முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இதில் 90 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் தயாரிக்கும் ரபேல் விமானங்களை இந்தியா ஏற்கெனவே 36 எண்ணிக்கையில் வாங்கி இயக்கி வருகிறது. தற்போது கூடுதலாக 114 விமானங்கள் வாங்குவதற்கான கோரிக்கைக் கடிதத்தை (Letter of Request) இந்தியா இறுதி செய்துள்ளது. அடுத்த சில வாரங்களில் இந்தக் கடிதம் பிரான்ஸுக்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் பெரும்பாலான விமானங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட உள்ளதால், இந்திய விமானப்படையின் போர் திறன் அதிகரிப்பதோடு, உள்நாட்டு பாதுகாப்புத் தொழில் துறையும் வலுப்பெறும். மீதமுள்ள விமானங்கள் பறக்கும் நிலையில் இந்தியாவுக்கு வரும். இந்திய விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங் அடுத்த மாத தொடக்கத்தில் பிரான்ஸ் செல்ல உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியும் ஜூன் மாத இறுதியில் பிரான்ஸுக்கு பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: வெடிக்கும் பிரச்சனை..! பதவி விலகிய எம்எல்ஏக்கள்.! ராஜினாமா ஏற்கப்படுவதாக சபாநாயகர் அறிவிப்பு..!
இந்திய விமானப்படைக்கு 114 விமானங்கள் வரும் நிலையில், இந்தியக் கடற்படையும் அடுத்த சில ஆண்டுகளில் விமானம் தாங்கி கப்பல் நடவடிக்கைகளுக்காக 26 ரபேல்-எம் (Rafale-M) விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது. தற்போதுள்ள போர் விமானப் பற்றாக்குறையை சரி செய்யவும், எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் இந்த ஒப்பந்தம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ரபேல் விமானங்கள் அதி நவீன ரேடார் தொழில்நுட்பம், நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் சக்திவாய்ந்த போர் திறனுக்காக உலக அளவில் புகழ்பெற்றவை. இந்த ஒப்பந்தம் இந்தியா-பிரான்ஸ் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய விமானப்படையின் தற்போதைய பலத்தை கணிசமாக அதிகரிக்கும் இந்த முடிவு, பிராந்திய பாதுகாப்பு சூழலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "அதிசயமே அசந்து போகும்.. நீ எந்தன் அதிசயம்"..!! காதல் மனைவியுடன் தாஜ்மஹாலை ரசித்த அமெரிக்க மந்திரி..!!