ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் வளைகுடா கடல் பகுதிகளில் சுமார் 23,000 இந்திய மாலுமிகள் சிக்கித் தவித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் இந்த முக்கிய ஜலசந்தியை ஈரான் மூடியது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் தடையை மீறி ஜலசந்தி வழியாக செல்லும் எந்த கப்பலையும் தாக்குவோம் என்று பகிரங்கமாக எச்சரித்துள்ளது. இதனால் அனைத்து எண்ணெய் டேங்கர்களும் மாற்று வழிகளைத் தேடி வளைகுடா கடலில் நங்கூரமிட்டு காத்திருக்கின்றன. அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹார்முஸ் வழியாக செல்லும் கப்பல்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்குவோம் என்று உறுதியளித்தாலும், பதற்றம் குறையவில்லை.
இந்த நெருக்கடியால் இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த 7 கப்பல்கள் உள்பட இந்தியக் கொடியில் பதிவு செய்யப்பட்ட 36 கப்பல்கள் வளைகுடா பகுதிகளில் சிக்கியுள்ளன.
இதையும் படிங்க: சுதீஷுக்கு அந்த அருகதை இல்லையா? பிரேமலதா விஜயகாந்த் சரமாரி கேள்வி..!!

இந்த கப்பல்களில் மட்டும் 1,074 இந்திய மாலுமிகள், அதிகாரிகள் உள்ளனர். மொத்தமாக வளைகுடா பிராந்தியத்தில் பணியாற்றும் இந்திய மாலுமிகளின் எண்ணிக்கை 23,000-ஐ தாண்டியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மத்திய அரசு ஒவ்வொரு மணி நேரமும் இந்த கப்பல்களின் நிலையை கண்காணித்து வருகிறது. வெளியுறவு அமைச்சகம், கப்பல் நிறுவனங்கள் மற்றும் தூதரகங்கள் மூலம் தொடர்ந்து தகவல் பரிமாற்றம் நடைபெற்று வருகிறது.
அதிர்ஷ்டவசமாக, ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்ட போதிலும், இந்திய கப்பல்கள் ஆபத்தான செங்கடல் வழியை தவிர்த்துள்ளன. இருப்பினும், நீண்ட நாட்கள் காத்திருப்பு நீடித்தால் உணவு, எரிபொருள், மருத்துவ உதவி உள்ளிட்டவை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இந்த நெருக்கடி இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியை பெரிதும் பாதித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை ஏற்கனவே உயர்ந்து வரும் நிலையில், தட்டுப்பாடு ஏற்படும் அச்சம் எழுந்துள்ளது. ரஷியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மாற்று இறக்குமதி திட்டங்கள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு முதன்மையானது என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. தேவை ஏற்பட்டால் அவர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கான திட்டங்கள் தயார் நிலையில் உள்ளன.
இதையும் படிங்க: போரை விரும்பல! ஆனா! எதுக்கும் தயார்!! பாகிஸ்தானை எச்சரிக்கும் தலிபான்கள்!! ஆப்கான் அதிரடி!