மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) நிறுவனர் ஆப்ஜித் தீப்கேவுக்கு தனது இந்திய குடியரசு கட்சி (ஏ)யில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்.டி.ஏ) நீண்டகாலமாக இடம்பெற்றுள்ள இக்கட்சியின் தலைவரும், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சருமான அத்வாலே, செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஆப்ஜித் தீப்கே அம்பேத்கரியவாதி என்று நான் கருதுகிறேன். அவர் துடிப்பான இளைஞர். அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்றவும், சமூகத்தையும் கட்சியையும் வலுப்படுத்தவும் அவர் எங்கள் கட்சியில் இணைய வேண்டும்” என்றார்.
தவறு செய்தவர்களை தண்டிக்கும் அரசுதான் தங்களுடையது எனவும் குறிப்பிட்டு, அதனால் தீப்கே ஆளும் கூட்டணியில் சேர வேண்டும் என வலியுறுத்தினார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த 30 வயது இளைஞரான தீப்கே, பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்தவர். முன்பு ஆம் ஆத்மி கட்சியில் சமூக ஊடகப் பணியில் ஈடுபட்ட இவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்தைத் தொடர்ந்து மே 2026இல் நையாண்டி இயக்கமாக சிஜேபியை தொடங்கினார்.
நீட் தேர்வு முறைகேடுகள் உள்ளிட்ட கல்வித்துறை குளறுபடிகளுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுத்தார். டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற நீண்டகால போராட்டம் காரணமாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். அதன்பின் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: முதலமைச்சரை சந்தித்தது ஏன்.? எதற்காக திடீர் சந்திப்பு..? திருமாவளவன் பேட்டி.!

தீப்கே இதுவரை அத்வாலேவின் அழைப்புக்கு பதிலளிக்கவில்லை. முன்னதாக அவர், “மக்கள் அரசியல் மற்றும் தேர்தல் முறை மீதும், ஊடகம், நீதித்துறை மீதும் நம்பிக்கை இழந்துள்ளனர். மற்றொரு அரசியல் கட்சியை விட பொது இயக்கம்தான் தேவை” என தெரிவித்திருந்தார். சிஜேபி தேர்தல் அரசியலில் ஈடுபடாமல் இயக்கமாகவே தொடரும் எனவும் உறுதியளித்துள்ளார்.
சமீபத்தில் மகாராஷ்டிராவில் அரசுப் பள்ளிகளின் நிலைமைகளை மேம்படுத்த ‘ஸ்கூல் தீக் கரோ’ பிரசாரத்தையும் தொடங்கியுள்ளார். ஜந்தர் மந்தரில் இரண்டாம் கட்ட போராட்டத்தை வலுவாக நடத்த திட்டமிட்டுள்ள தீப்கேவுக்கு அத்வாலேவின் இந்த அழைப்பு, இளைஞர் இயக்கத்தின் அரசியல் பாதையைப் பற்றிய புதிய விவாதத்தை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: பில் கட்டாததால் முக்கிய துறை அதிகாரிகள் செல்போன் சேவை துண்டிப்பு... தமிழகம் முழுவதும் மக்கள் திண்டாட்டம்...!