அணு ஆயுத தயாரிப்பை கைவிட மறுத்து வந்த ஈரான் மீது பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி கடந்த 13ம் தேதி இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. ஈரானின் ராணுவ மையங்கள், அணு ஆயுத கூடங்களை குறி வைத்து அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசியது. இஸ்ரேலின் தொடர் தாக்குதலில், ஈரானின் பல ராணுவ தளபதிகள், பல அணு விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டனர்.
பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. ஒரு வாரமாக போர் தொடர்ந்த நிலையில், ஞாயிறன்று ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் போரில் குதித்தது.
ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் அணு உலைகள் மீது அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தின. அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக செவ்வாயன்று இரவு கத்தார் நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணைகளை வீசியது.
இதையும் படிங்க: கண்ணுல பட்டுருந்தா காலி பண்ணிருப்போம்! காமெனியை கொலை செய்ய ஸ்கெட்ச்.. இஸ்ரேல் ஒப்புதல்..

இதனால் மத்திய கிழக்கில் நிலவி வந்த பதட்டம் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், 25ம் தேதி இஸ்ரேல் – ஈரான் போர் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் அமெரிக்காவை ஈரான் வென்றதற்கு எனது வாழ்த்துகள் என ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி தெரிவித்தார். இஸ்ரேல் முற்றிலும் அழிந்துவிடும் என்று உணர்ந்ததால் தான் போரில் அமெரிக்கா நேரடியாக நுழைந்தது.
அந்த ஆட்சியை காப்பாற்றும் முயற்சியாகவே போரில் நுழைந்தாலும், அது எதையும் சாதிக்கவில்லை. அமெரிக்காவின் முகத்தில் ஈரான் மிகப்பெரிய அடியை கொடுத்திருக்கிறது. கத்தாரில் உள்ள முக்கிய அமெரிக்க ராணுவ தளத்தையே தாக்கி உள்ளோம்.இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அமெரிக்காவின் முக்கியமான மையங்களை ஈரானால் அணுக முடியும் என்பதும், தேவை என்றால் தாக்க முடியும் என்பதும் தான்.

இதுபோன்ற தாக்குதல் எதிர்காலத்தில் மீண்டும் நடக்கலாம். ஏதாவது ஆக்கிரமிப்பு ஏற்பட்டால், எதிரி நிச்சயம் அதிக விலை கொடுக்க நேரிடும் என்றும் கமெனி எச்சரித்தார். இது தொடர்பாக செய்தி சேனலுக்கு, அதிபர் டிரம்ப் அளித்த பேட்டி: ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனியை படுகொலையில் இருந்து காப்பாற்றினேன். அவர் நன்றியில்லாமல் இருக்கிறார். அணு ஆயுதங்களை தயாரிக்க முயன்றால், ஈரானில் குண்டுகள் வீச உத்தரவிடுவேன்.

அவர் (அயதுல்லா அலி கமேனி ) எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார் என்பது எனக்கு சரியாகத் தெரியும். உலகின் மிகப் பெரிய மற்றும் சக்திவாய்ந்த இஸ்ரேல் அல்லது அமெரிக்க ஆயுதப் படைகள் அவரது வாழ்க்கையை முடிக்க அனுமதிக்க மாட்டேன். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த அடி! போர் முடிந்து முதன்முறை வாய் திறந்த காமெனி..