தமிழக அரசியலில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள அதிர்வுகளில் முக்கியமான ஒன்று, தமிழக வெற்றி கழகம் தலைமையிலான விஜய் அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவுக்குள் ஏற்பட்ட பிளவு ஆகும். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தரப்பு, கட்சி உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எம்எல்ஏக்களுக்கு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. இது அதிமுகவுக்குள் மீண்டும் ஒரு பிளவை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக உள்ளிட்டோரின் ஆதரவுடன் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இந்தப் புதிய அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று சட்டப்பேரவையில் நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் தவெக அரசு 144 வாக்குகளுடன் வெற்றி பெற்றது. அதிமுகவின் மொத்த பலம் 47 எம்எல்ஏக்களாக இருந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க உத்தரவிட்டது. இருப்பினும், எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் தலைமையில் சுமார் 25 எம்எல்ஏக்கள் கட்சி உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எடப்பாடி அணியைச் சேர்ந்த 22 பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தப் பிளவு அதிமுகவின் உட்கட்சி நிலைமையை மீண்டும் சிக்கலாக்கியது.

வாக்கெடுப்புக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உடனடியாக நடவடிக்கை எடுத்தது. தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்களின் கட்சி பதவிகளைப் பறித்து உத்தரவிட்டார். சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், ஆர். காமராஜ், சி. விஜயபாஸ்கர், பி. தங்கமணி, கே.பி. அன்பழகன், பா. பென்ஜமின், உடுமலை ராதாகிருஷ்ணன், எஸ்.டி.கே. ஜக்கையன், இசக்கி சுப்பையா உள்ளிட்ட முக்கிய புள்ளிகளின் பொறுப்புகள் நீக்கப்பட்டன.
இதையும் படிங்க: பிளவுபட்ட அதிமுக...! செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் அதிமுக EX.MP ஐக்கியம்..!
தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு கொடுத்த எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமைச் செயலகம் வருகை தந்துள்ளார். வேலுமணி தரப்பிலிருந்து தலைமைச் செயலகத்திற்கு இசக்கி சுப்பையா சென்றுள்ளார். தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவளித்தவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று வேலுமணி தரப்பு வலியுறுத்தி வருகிறது. அதிமுக பிளவு பட்டுள்ள நிலையில் இரு தரப்பினரும் சபாநாயகரை சந்திக்க காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: சி.வி.சண்முகம் ஆதரவு விஜய்க்கு தேவையில்லை! கார்த்தி சிதம்பரம் எம்.பி அதிரடி!