சென்னை: அ.தி.மு.க.,வில் பொதுச்செயலர் பழனிசாமிக்கு எதிராக தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சித் தலைமை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை கட்சியில் இருந்து நீக்குவதா அல்லது சஸ்பெண்ட் செய்வதா என்ற விவாதம் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின்னர் அ.தி.மு.க.,வில் பழனிசாமிக்கு எதிரான அதிருப்தி குரல்கள் அதிகரித்துள்ளன. முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் வேலுமணி உள்ளிட்டோர் வெவ்வேறு நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் வேலுமணி, பழனிசாமியை நேரடியாக விமர்சிக்காமல், சசிகலா, தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியுடன் இணைத்து அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஆனால், சி.வி.சண்முகம் பழனிசாமியின் செயல்பாடுகளை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். இதன் காரணமாக, வேலுமணி, தங்கமணி, விஸ்வநாதன் உள்ளிட்டோருக்கு கட்சி பொறுப்புகள் வழங்கப்பட்டபோதும், சண்முகத்துக்கு முக்கிய பதவி வழங்கப்படவில்லை. அவரது ஆதரவாளர்களாக கருதப்படும் சில நிர்வாகிகளும் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: நிதி கசிவு முதல் 13 லட்சம் காலிப்பணியிடங்கள் வரை..! தவெக அரசை கேள்விகளால் திணறடித்த EPS..!!
இந்த சூழலில், சண்முகம் மீது நேரடியாக நடவடிக்கை எடுப்பது குறித்து பழனிசாமி ஆலோசித்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சிக்குள் தனது கட்டுப்பாட்டை வலுப்படுத்தும் நடவடிக்கையாக, தனக்கு எதிரானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதாக சில எம்.எல்.ஏ.,க்கள் கூறுகின்றனர்.
அதேநேரத்தில், சண்முகத்தை கட்சியில் இருந்து நீக்குவது எதிர்மறையான அரசியல் விளைவுகளை ஏற்படுத்தலாம் என்ற கருத்தும் கட்சிக்குள் நிலவுகிறது. குறிப்பாக, அவர் கட்சியை விட்டு வெளியேறினால், த.வெ.க., அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வாய்ப்பு இருப்பதாக சில மூத்த நிர்வாகிகள் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், சசிகலா மற்றும் தினகரனை மீண்டும் கட்சியில் இணைப்பது தொடர்பான விவகாரத்திலும் வேலுமணிக்கும் சண்முகத்துக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், சண்முகம் விவகாரத்தில் உடனடி நடவடிக்கைக்கு பதிலாக பொறுமையாக செயல்பட வேண்டும் என சில மூத்த தலைவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், பழனிசாமியின் தலைமை குறித்து மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார். பழனிசாமி பொதுச்செயலராக பொறுப்பேற்ற பிறகு நடந்த தேர்தல்களில் அ.தி.மு.க., தொடர்ந்து வெற்றி பெறவில்லை என்றும், தற்போது எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
அ.தி.மு.க., வெற்றி பெற்ற தொகுதிகளை பழனிசாமியின் செல்வாக்கால் கிடைத்த வெற்றி எனக் கூறுபவர்கள், தோல்விகளுக்கும் அவரையே பொறுப்பேற்கச் சொல்வார்களா என்றும் சண்முகம் கேள்வி எழுப்பினார். குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட தோல்விகளுக்கு யார் பொறுப்பு என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால், சி.வி.சண்முகம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது தற்போதைய நிலையே தொடருமா என்பது அ.தி.மு.க.,வில் அடுத்த முக்கிய அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சி.வி. சண்முகம் ஏன் தோற்றார்.? இனி எடப்பாடி ஆட்சி தான்..!! அக்ரி கிருஷ்ணமூர்த்தி உறுதி.!!