அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய் மற்றும் அவரது கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார். அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சியையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய்யின் கட்சி சின்னமான 'விசில்' குறித்து கேலியாக கருத்து தெரிவித்தார்.
"விசில் எப்போது அடிப்பார்கள்? ஆபத்தில் இருக்கும்போதுதான் அடிப்பார்கள். டைட்டானிக் படத்தைப் பார்த்தீர்களா? கடைசி கிளைமாக்ஸில்தான் விசில் அடிப்பார்கள். அது ஆபத்தை உணர்த்துவதற்காகத்தான்" என ஜெயக்குமார் கூறினார். தவெகவினர் தற்போது ஆபத்தில் இருப்பதால் விசில் அடிக்கிறார்கள் என்று அவர் கிண்டலடித்தார்.

மேலும், "பாஸ்ட்புட் மாதிரி ஒருத்தர் கட்சி ஆரம்பிச்சுட்டு, அதில் உள்ளவர்களை காப்பாற்ற விசில் அடிச்சுட்டு இருக்காங்க" என்றும் தாக்கினார். மேலும் விஜய்யின் வருமானம் குறித்தும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். "விஜய் வாங்கும் சம்பளம் கறுப்பா, வெள்ளையா? எவ்வளவு வரி செலுத்துகிறார் என்பதை சொல்ல முடியுமா? கறுப்பு அதிகம், வெள்ளை குறைவு" என்று குற்றம்சாட்டினார். அவரது பெயரில் வருமான வரி வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: முதல்வருக்கு அடுத்த நாள் விஜய்....! தவெக அருண்ராஜ் அதிரடி!
"ஊழல்வாதி என்று எங்களை சொல்கிறார். ஆனால் அவரது நிலையில் இருந்து எப்படி இதைச் சொல்ல முடியும்?" என்று கேள்வி எழுப்பினார். அதுமட்டுமின்றி தவெகவை 'நடுவில் வந்து திமுக-தவெக இடையே போட்டி' என்று விஜய் கூறுவதை ஜெயக்குமார் கண்டித்தார். "யார் யாரை விமர்சிக்க வேண்டும் என்ற விவஸ்தை இல்லாதவர் விஜய். ஆதவ் அர்ஜுனாவின் லாட்டரி பணத்தில்தான் கட்சி நடக்கிறது என்று சொல்வது போல் உள்ளது. 'நானும் ரவுடிதான்' என்பது போன்றது" என்று விமர்சித்தார்.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து, தவெக தொடக்க விழாவில் விஜய் நடனமாடியதால் அந்த குடும்பங்கள் எவ்வளவு வேதனைப்படும் என்று கேட்டார். மேலும் எம்ஜிஆரை ஒப்பிட்டு பேசிய ஜெயக்குமார், "எம்ஜிஆர் 1953 முதல் மக்களுக்கு உதவி செய்தார், விளம்பரம் இல்லாமல். தேர்தலை மனதில் வைத்து உதவி செய்வதில் உள்நோக்கம் உள்ளது" என்றார். எம்ஜிஆர் போட்டியிட்ட தேர்தல்களில் வென்றவர், மக்களுக்கு உதவியவர் என்று புகழ்ந்தார். விஜய் எம்ஜிஆராக முடியாது என்றும் அவர் உறுதியாகக் கூறினார்.

அதிமுகவை தொட்டால் விஜய் கெட்டுப்போவார் என்று எச்சரித்த ஜெயக்குமார், "அதிமுக, திமுக இடையேதான் போட்டி. விஜய் போட்டியிலேயே இல்லை" என்றார். இதுவரை அதிமுக விஜய்யை பெரிதாக விமர்சிக்கவில்லை, கரூர் சம்பவத்தில் ஆதரவாகவே பேசியது. ஆனால் விஜய் சமீபத்தில் அதிமுக மீது கடுமையான விமர்சனம் வைத்ததால், எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜு, உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 2026-ல் ஆட்சி பீடத்தை கைக்கொள்வோம்! தவெக மூன்றாம் ஆண்டை முன்னிட்டு தலைவர் விஜய் சபதம்!