தான் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையப் போவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அனைத்தும் முற்றிலும் தவறான தகவல் என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் (DISHA) கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன், கரூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சத்யா மற்றும் அனைத்து துறை அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதித்தனர்.

கூட்டம் நிறைவடைந்ததை அடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினர். "நீங்கள் ஆளுங்கட்சியான தவெக-வில் இணையப் போவதாகச் செய்திகள் பரவி வருகிறதே, அது உண்மையா?" என்று செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த அவர், "அதில் எள் அளவும் உண்மை இல்லை; ஊடகங்களில் வெளியாகும் அந்தச் செய்தி முற்றிலும் தவறான தகவல்" என்று கூறி அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மதுரை மற்றும் கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய அதிமுக தலைவர்கள் தவெக-வில் இணையப் போவதாக அண்மைக்காலமாக வதந்திகள் பரவி வரும் சூழலில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் விடுத்துள்ள இந்த நேரடி விளக்கம் அரசியல் வட்டாரங்களில் நிலவி வந்த விவாதங்களை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர் ஷாஜகான் பேச்சு வருத்தமளிக்கிறது! தவெக அமைச்சரை சாடிய எஸ்டிபிஐ தலைவர் முகம்மது முபாரக்!
இதையும் படிங்க: இன்னமும் திரைப்பாடலுக்கு இசை வாசிக்கிறதா காவல்துறை? தவெக அரசை உலுக்கிய சீமானின் ஆக்ரோஷ கேள்வி!