சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் மகன் அமித் ஜோகி, 2003ல் நடந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் ராமவதார் ஜக்கி படுகொலை வழக்கில் குற்றவாளி என சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. மூன்று வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
2000ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்திலிருந்து சத்தீஸ்கர் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது. அதன் பிறகு 2000 முதல் 2003 டிசம்பர் வரை காங்கிரஸ் சார்பில் அம்மாநிலத்தின் முதல் முதல்வராக அஜித் ஜோகி பதவி வகித்தார். பின்னர் காங்கிரஸிலிருந்து விலகி 2016ல் ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார்.
அஜித் ஜோகி முதல்வராக இருந்த காலத்தில், 2003 ஜூன் 4ஆம் தேதி ராய்பூரில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் ராமவதார் ஜக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது வி.சி. சுக்லாவுக்கு நெருக்கமானவராகக் கருதப்பட்ட ஜக்கியின் படுகொலை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: டிஸ்சார்ஜ்!! சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் காங்., மூத்த தலைவர் சோனியா காந்தி!!

முதலில் மாநில போலீசார் விசாரணை நடத்தினர். 2003 டிசம்பரில் காங்கிரஸ் தோல்வியடைந்து பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, 2004 ஜனவரியில் வழக்கு சி.பி.ஐ. வசம் மாற்றப்பட்டது. சி.பி.ஐ. விசாரணையில் அமித் ஜோகிக்கு கொலையில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 29 பேர் மீது ராய்பூர் விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
2007 மே 31ஆம் தேதி விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, 28 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாகவும், அமித் ஜோகி மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அவரை விடுதலை செய்தது. இதை எதிர்த்து சி.பி.ஐ. உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஆனால் தாமதம் காரணமாக 2011ல் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சத்தீஸ்கர் மாநில அரசு மற்றும் கொலை செய்யப்பட்ட ஜக்கியின் மகன் சதீஷ் ஜக்கி தாக்கல் செய்த மேல் முறையீடுகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த நிலையில் சி.பி.ஐ. உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம், அமித் ஜோகியின் விடுதலையை எதிர்த்து புதிய மேல் முறையீடு செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் கடந்த மாதம் முதல் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
நேற்று சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரமேஷ் சின்ஹா மற்றும் நீதிபதி அர்விந்த் குமார் அமர்வு, விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து அமித் ஜோகியை குற்றவாளி என அறிவித்தது. மூன்று வாரங்களுக்குள் அவர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு சத்தீஸ்கர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: என்ன விஜய்?!! இப்படிப்பண்ணா எப்படி? பெரம்பூரில் பூட்டிக் கிடக்கும் தவெக அலுவலகம்!!