டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மிகக் காட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தங்களது வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது காவல் துறை ஏவிய வன்முறைத் தாக்குதலுக்கு மத்திய உள்துறை அமைச்சகமே நேரடிப் பொறுப்பாகும். இத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாகப் பதவி விலக வேண்டும்.

ஒருவேளை மாணவர்களைத் தாக்க அமைச்சர் அமித் ஷா உத்தரவிடவில்லை என்றால், நாட்டின் தலைநகரிலேயே தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காவல் துறை என்ன செய்கிறது என்பதே தெரியாமல் அவர் இருக்கிறார் என்றுதான் அர்த்தம். எவ்வாறாயினும், இத்தகைய தாக்குதலுக்கு உத்தரவிடாவிட்டாலும் கூடத் தனது துறையில் நடக்கும் அநீதியைத் தடுக்கத் தவறியதற்காக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தே ஆக வேண்டும்.
இதையும் படிங்க: அவைக்கு வர மோடியும் அமித்ஷாவும் பயப்படுகிறார்கள்! மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு!
நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் வேலைவாய்ப்பு முறைகேடுகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் மாணவர்களையும் இளைஞர்களையும் அரசதிகாரத்தைக் கொண்டு ஒடுக்கப் பார்க்கிறார்கள். ஜனநாயக நாட்டில் தங்களது உரிமைகளுக்காகப் போராடும் இளைஞர்களின் குரலை வன்முறை மூலம் ஒருபோதும் நசுக்கிவிட முடியாது என்றும் ராகுல் காந்தி ஆவேசமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கும் அமித் ஷா..!! எதிர்க்கட்சிகளுக்கு கிரண் ரிஜிஜு வைத்த வேண்டுகோள் என்ன..??