தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, திருவாரூரில் நேற்று பாஜக வேட்பாளரை ஆதரித்து நடத்திய தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க., மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணிக் கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.
அண்ணாமலை பேசுகையில், “திருவாரூர் தொகுதியில் 1996 முதல் 30 ஆண்டுகளாக தி.மு.க. வெற்றி பெற்று வருகிறது. ஆனால் பொருளாதாரத்தில் திருவாரூர் மாவட்டம் கடைசி இடங்களில் ஒன்றாக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு நெல் கொள்முதலில் இரண்டாவது இடத்தில் இருந்த திருவாரூர் இப்போது 10வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
நெல்லை பாதுகாக்க எந்த வசதியும் இல்லை. மத்திய அரசு கொடுக்கும் நிதி கொள்ளையடிக்கப்படுகிறது. ஆனால் முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசு நெல் வாங்குவதில்லை என்று பொய் சொல்கிறார்” என்றார்.
இதையும் படிங்க: குழந்தைதனமா இல்லையா? சாக்கு சொல்லி சிக்கிய செல்வப்பெருந்தகை! விளாசும் அண்ணாமலை!

உர மானியமாக மத்திய அரசு 29,132 கோடி ரூபாய் கொடுத்தும் அதை விவசாயிகளுக்கு சரியாக வழங்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். “மத்திய அரசு நெல் குவின்டாலுக்கு 2,369 ரூபாய் உயர்த்திக் கொடுத்தது. அதோடு 105 ரூபாய் சேர்த்து 2,500 ரூபாய் என்று தி.மு.க. அரசு பொய் சொல்கிறது. ரேஷன் கடையில் கொடுக்கப்படும் அரிசி பிரதமர் மோடியுடையது. மஞ்சள் பை மட்டுமே ஸ்டாலினுடையது” என்று கிண்டல் செய்தார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை நோக்கி அண்ணாமலை, “மாமன்னர் ராஜராஜ சோழனை விட அமைச்சர் சேகர்பாபு அதிக குடமுழுக்கு செய்திருப்பதாக கமல் கூறியுள்ளார். வாங்கிய காசுக்கு அளவாக கமல் கூவ வேண்டும்” என்று கடுமையாக விமர்சித்தார்.
திருவாரூரில் எதிரணி சார்பில் போட்டியிடும் கலைவாணன் மீது கொலை வழக்குகள் உள்ளதாகவும், அவரது அண்ணன் மகன் கலைவேந்தன் மீது தீண்டாமை வன்கொடுமை வழக்குகள் இருப்பதாகவும் அவர் கூறினார். நன்னிலத்தில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ. தலைவர் முபாரக், கொரோனா காலத்தில் போலி மருந்து விற்றதாகவும், 2023-ல் திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் அவரது வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியதாகவும் குற்றம் சாட்டினார்.
“அவருக்கு ஒரு ஓட்டு போட்டாலும் அது இந்திய இறையாண்மைக்கு எதிரான ஓட்டு” என்று அண்ணாமலை எச்சரித்தார். திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலய குளம் அசுத்தமாக உள்ளதாகவும், ‘பிரசாத்’ திட்டத்தில் திருவாரூருக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை என்றும் அவர் புகார் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுகவுக்கு எதிரான கோவம் வெளிப்பட துவங்கியுள்ளது!! தென் தமிழகம், டெல்டா, கொங்கு பகுதியில் வெற்றி உறுதி - அண்ணாமலை!