நாம் தமிழர் கட்சியில் (நாதக) புதிதாக 1,000 உறுப்பினர்கள் இணைந்த நிகழ்ச்சி இன்று பல்லாவரத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு உரையாற்றினார். தமிழக அரசியல் சூழல், ஆட்சி நிர்வாகம் மற்றும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து அவர் கடுமையாக விமர்சித்தார்.
“நடிகருக்கும் அரசியல் தலைவருக்கும் உள்ள வேறுபாட்டை உணராத மக்கள், நடிகரிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டனர்” என சீமான் குறிப்பிட்டார். பிளாக் டிக்கெட் விற்றவர்கள் இப்போது திரள்நிதி கூட்டம் என தங்களை விமர்சிப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், “என் மாமா ஒருவர் கார் வாங்கி வீட்டு வாசலில் நிறுத்திச் சென்றார். நான் கோவணம் கட்டிக்கொண்டு இருக்க வேண்டுமா? கார் வாங்கக்கூடாதா?” என கேள்வி எழுப்பினார். திரள்நிதி திருடன் என தங்களைப் பழிப்பவர்களை ‘அயோக்கியர்கள்’ எனச் சாடினார்.
விஜய் குறித்து பேசிய சீமான், “தமிழகத்தில் பல தொகுதிகள் இருக்கும்போது, பெரம்பூரில் மதம், திருச்சி கிழக்கில் சாதி-மத காரணங்களுக்காகப் போட்டியிட்ட ஜோசப் விஜயால், எப்படி சாதி-மதத்தை ஒழிக்க முடியும்?” எனக் கேட்டார். திமுகவின் விளம்பர அரசைப் பின்பற்றி தமிழக வெற்றிக் கழகமும் செயல்படுவதாகக் குற்றம்சாட்டிய அவர், பேருந்து நிலையங்களில் பதாகைகள் வைத்து கோடிக்கணக்கில் செலவழிப்பதைக் கண்டித்தார். “ஒன்லி ரீல்ஸ் தான்” என ஏளனம் செய்தார்.
இதையும் படிங்க: போராடும் தொழிலாளர்களை அடித்து விரட்டுவதா? தவெக அரசுக்கு சீமான் கண்டனம்!

மின்சாரப் பிரச்சினையை எடுத்துரைத்த சீமான், “தமிழகத்தில் தினசரி 6 மணி நேரம் மட்டுமே மின்சாரம் இருக்கிறது. ஆனால் மின் கட்டணம் அதிகரித்துள்ளது. இன்னும் ஆறு மாதங்களில் யாரும் டிவிகே-க்கு வாக்களிக்க மாட்டார்கள்” என்றார். மீனவர்கள் 850 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவர்களது குடும்பங்களுக்கு நிதி உதவி அல்லது அரசுப் பணி வழங்கப்படவில்லையெனச் சுட்டிக்காட்டி, கரூர் சம்பவத்தில் அரசு வேலை வழங்கியதை எதிர்ப்பதாக அறிவித்தார்.
லஞ்சம் கேட்டால் கொடுக்க வேண்டாம் எனச் சொல்பவர்கள், லஞ்சம் வாங்குபவர்களைப் பணிநீக்கம் செய்ய முடியாத நிலையை விமர்சித்தார். ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் வழங்கும் மத்திய அரசு, நதிநீர் பிரச்சினையில் முன்வரவில்லையெனக் கேள்வி எழுப்பினார். “இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என வெறியுடன் காத்திருக்கிறேன். நாங்கள் இன்னும் களத்திற்கு வரவில்லை. வந்தால் நீங்கள் என்னவாவீர்கள்?” என எச்சரித்தார்.
நாதகவின் வளர்ச்சி மற்றும் மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்திப் பேசிய சீமானின் உரை, கட்சியின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது.
இதையும் படிங்க: முதல்வருக்கு ஒரு நீதி, சீமானுக்கு ஒரு நீதியா? காவல்துறையை வெளுத்து வாங்கிய மதுரை உயர் நீதிமன்றம்!