தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி, மக்களின் அன்றாடத் தேவைகளை அவர்களின் வாசலில் நிறைவேற்றும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை 2025 ஜூலை மாதம் தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ், அரசுத் துறைகளின் 46 முக்கிய சேவைகள் – சாதி சான்று, பட்டா மாற்றம், பென்ஷன், ஆதார் திருத்தம் போன்றவை – மக்களிடம் நேரடியாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த முகாம்கள் மாநிலம் முழுவதும் நடத்தப்படுகின்றன.
அதில் அரசு பள்ளிகளும் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகின்றன. குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் இத்திட்டத்தின் மையமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இந்த முகாம்கள் அரசு பள்ளிகளில் நடத்தப்படுவதால் எழுந்துள்ள பல்வேறு விமர்சனங்கள் அரசின் நோக்கத்தையும் செயல்பாட்டையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளன. இவை வெறும் அரசியல் பிரச்சாரத்தின் போர்வையில் மட்டுமே இருப்பதாகவும், உண்மையான சேவைக்குப் பதிலாக பல சிக்கல்களை ஏற்படுத்துவதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கான இடமாக இருக்க வேண்டிய பள்ளிகளை அரசியல் நிகழ்ச்சிகளின் களமாக மாற்றுவது, கல்வியின் தரத்தை இழிவுபடுத்துவதாக குற்றம் சாட்டுகின்றனர். திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்துடையான்பட்டி ஊராட்சியில், நூற்றாண்டு விழா கண்ட ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு விடுமுறை அளித்து, திமுக அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்று இருப்பதாகவும் திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகள் கூட பலிகடா ஆக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இதையும் படிங்க: “டிடிவி-கிட்ட எவ்வளவோ சொன்னேன்... கேட்கலையே??” - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அண்ணாமலை...!
பள்ளிக் கல்வித் துறை ஏற்கனவே பரிதாப நிலையில் இருக்கிறது எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே, சுமார் நூறுக்கும் அதிகமான மாணவர்கள் பயிலும் பள்ளிக்கு விடுமுறை அளித்து, திமுகவின் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தும் அளவுக்கு, அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுகிறது என குற்றம் சாட்டினார். நிகழ்ச்சி நடத்த, ஊரை அடித்து உலையில் போட்டிருக்கும் திமுகவினருக்குச் சொந்தமாக திருச்சியில் வேறு இடங்களா இல்லை என்றும் ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிதானே என்ற அலட்சியப் போக்கு என்றும் திமுகவின் இந்த மக்கள் விரோதப் போக்குக்கு, வரும் 2026 தேர்தலில் தமிழக மக்கள் முடிவு கட்டுவார்கள் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சனிக்கிழமைகளில் மட்டும் பிரச்சாரம் - விஜய்க்கு அட்வைஸ் கொடுத்த அண்ணாமலை!