தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் நிர்வாகத் தவறுகளை ஆக்கப்பூர்வமாகச் சுட்டிக்காட்டி, அரசு சிறப்பாகச் செயல்பட ஓராண்டு கால அவகாசம் வழங்குவோம் என்று பாஜக மூத்த தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் நிர்வாக செயல்பாடுகள் குறித்து விரிவாகப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "எந்தவொரு புதிய அரசும் தனது கொள்கைகளைச் செயல்படுத்திக் காட்ட குறிப்பிட்ட கால அவகாசம் தேவை. தவெக அரசின் தவறுகளை நாங்கள் சுட்டிக்காட்டுவோம்; அதேநேரத்தில் அவர்கள் செயல்பட ஓராண்டு கால அவகாசம் கொடுப்போம். தற்போதைய எதிர்க்கட்சிகளுக்கு ஆட்சியை உடனடியாகக் கவிழ்க்க வேண்டும் என்பது மட்டுமே பிரதான குறிக்கோளாக உள்ளது. நாங்கள் ஆக்கப்பூர்வமான மக்கள் அரசியலை முன்னெடுக்கிறோம்" என்று குறிப்பிட்டார்.
மேலும், தனது அரசியல் பயணம் குறித்துப் பகிர்ந்த அவர், "மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்னை டெல்லியில் முக்கியப் பொறுப்பு வகித்து 3 ஆண்டுகள் அங்கேயே இருக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், நான் தமிழகத்திலேயே தங்கி மக்களுக்கு நேரடிச் சேவை செய்து அரசியல் செய்யவே விரும்புகிறேன் என்பதை அவரிடம் மிகத் தெளிவாக எடுத்துரைத்துவிட்டேன்" என்றார்.

இதையும் படிங்க: உதயநிதி கைதுக்கு தவெக அரசுக்கு கண்டனம்: திமுக சட்டத்துறை கூட்டத்தில் தீர்மானம்!
தொடர்ந்து தமிழகத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சி குறித்து முதலமைச்சர் விஜய்க்கு முக்கியக் கோரிக்கை விடுத்த அண்ணாமலை, "தமிழகத்தில் நீர் மேலாண்மை, கல்வித் தரம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்காக மாநில அரசு உடனடியாக ரூ.25,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தலைவர்கள் டெல்லியில் அமர்ந்துகொண்டு தமிழகத்தின் எதிர்கால முடிவுகளைத் தீர்மானிக்கக் கூடாது. டெல்லி, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை, போயஸ் கார்டன் அல்லது பனையூரில் இருந்து மட்டுமே முடிவெடுப்பேன் என்ற ஒற்றை ஆதிக்கக் காலம் தற்போது மலையேறிவிட்டது. மக்களோடு மக்களாக நின்று முடிவெடுக்கும் புதிய அரசியல் கலாச்சாரமே தமிழகத்திற்குத் தேவை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 502 செவிலியர் பணியிடங்கள் ரத்து! பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்!