தமிழக அரசியலில் சமீபத்தில் எழுந்துள்ள ஒரு மிகப்பெரிய சர்ச்சை, ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் எம். பழனியாண்டி தொடர்பானது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம், சிவாயம் பகுதியில் அவர் தொடர்புடையதாகக் கூறப்படும் சட்டவிரோத கல்குவாரி குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் கதிரவன், ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் உள்ளிட்ட குழுவினர் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவம் பத்திரிகை சுதந்திரத்தையும், ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்களையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
50க்கும் மேற்பட்ட கும்பல் ஒருவர் சூழ்ந்து கொண்டு, கற்கள், கம்பிகள், உருட்டு கட்டைகள் போன்றவற்றால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. செய்தியாளர்கள் கடத்தப்பட்டு, தாக்கப்பட்டு, அவர்களிடமிருந்த கேமரா, மைக், லைவ் கிட் உள்ளிட்ட உபகரணங்கள் சேதப்படுத்தப்பட்டன. செய்தியாளர் கதிரவன் உள்ளிட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அவர்கள் கதறி அழுது உதவி கேட்ட குரல்கள் சமூக வலைதளங்களில் பரவியது, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இத்தாக்குதலுக்கு முக்கியக் காரணமாக எம். பழனியாண்டி எம்எல்ஏ நேரடியாக ஈடுபட்டதாகவும், அவரது ஆதரவாளர்களும், குவாரி தொழிலாளர்களும் சேர்ந்து செயல்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. சில வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களில் எம்எல்ஏ நேரடியாக ஆவேசமாகப் பேசி தாக்குதலைத் தூண்டியதாகக் காட்டப்படுகிறது. மேலும், எம்எல்ஏவின் மகன் விமலநாதன் தொடர்புடைய ஆடியோ ஒன்று வெளியாகி, தாக்குதலுக்குப் பிறகு புகார் கொடுத்து செய்தியாளர்கள் மீதே குற்றம் சுமத்தும் சதி திட்டமிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குவாரி தொழிலாளர்கள் தரப்பிலும் எதிர்ப்புக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுகவின் சமூக காவலர்கள் நாடகம்..! தப்பி தவறி கூட சமூக நீதி- ன்னு சொல்லாதீங்க..! நயினார் ஆவேசம்..!

இச்சம்பவம் திமுகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக எம்எல்ஏ பழனியாண்டி கொலைவெறித் தாக்குதல் நடத்தியது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. இதற்கிடையில் பதவியில் இருக்கும் ஒருவர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது நியாயமா என்றும் அவர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தார். தவறு செய்தவர்களை பாதுகாக்க அரசு நினைக்காது எனவும் உறுதிப்பட தெரிவித்துள்ளார். புகார் கொடுத்தல் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சபாநாயகர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தீண்டாமை... ஆதாரத்துடன் வெளுத்து வாங்கிய அதிமுக..!