அருணாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக திபாங் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி ராணுவ வீரர்கள் 5 பேர் மாயமாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை பெய்த கனமழையைத் தொடர்ந்து பல பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆறுகள் மற்றும் நீரோடைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்ததுடன், பல இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்ததால் மீட்பு பணிகளிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் பசு பாணி பகுதியில் அமைந்திருந்த ராணுவ முகாம்கள் பாதிக்கப்பட்டன. அங்கிருந்த இரண்டு முகாம்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது முகாமில் இருந்த 7 ராணுவ வீரர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: 2018 வெள்ளம், 2020 நிலச்சரிவு! ஆகஸ்ட் வந்தாலே பயம்... கேரள மக்களை நடுங்க வைக்கும் பருவமழை!
இதையடுத்து மீட்புக் குழுவினர் தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில் 2 ராணுவ வீரர்கள் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 5 வீரர்களை காணவில்லை. அவர்களை கண்டுபிடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே, அப்பர் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள கியோஜாரிங்-பியாச்சிங் சாலை வெட்டும் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவிலும் பலர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் 4 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மாநில பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் மாநிலம் முழுவதும் பெருமளவு உள்கட்டமைப்பு சேதமடைந்துள்ளது. 235 சாலைகள், 40 பாலங்கள், 75 சிறு பாலங்கள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் 373 நீர் விநியோக அமைப்புகள், 161 மின் இணைப்புகள், 823 மின் கம்பங்கள், 66 நீர்ப்பாசனத் திட்டங்கள், 122 அரசு கட்டிடங்கள், 41 பள்ளிகள் மற்றும் 12 நீர்மின் திட்டங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழை மற்றும் அதனால் ஏற்படும் நிலச்சரிவுகளால் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. அருணாச்சலில் மாயமான ராணுவ வீரர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அடுத்தடுத்த மழை பாதிப்புகளை சமாளிக்க மீட்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: #BREAKING கடவுளின் தேசத்தை கதறவிடும் இயற்கை... கேரளாவில் 2 இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு... 3 பேர் பலி..!