திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதற்கு 2022 ஆம் ஆண்டு நீதிமன்றம் விதித்த தடை, வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன்படி, பக்தர்கள் முழுமையான பாதுகாப்பு சோதனைக்குப் பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். மேலும், பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக ஒப்படைத்து வைப்பதற்காக கோயில் வளாகத்தின் பல்வேறு இடங்களில் சிறப்பு செல்போன் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசனம் செய்து வருகிறார்கள். கோயிலுக்குள் தரிசனம் செய்யும் பக்தர்கள் செல்போன்கள் கொண்டு சென்று மூலவரை புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் தங்களது ஆதங்கத்தை பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிடும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதையும் படிங்க: திருச்செந்தூர் தரிசன டிக்கெட் மோசடி வழக்கு... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த முக்கிய உத்தரவு...!
இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 2022 ஆம் ஆண்டு நடந்த வழக்கு ஒன்றில் கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன்கள் பயன்படுத்துவதை தடை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குள் செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இந்த நீதிமன்ற உத்தரவை முழுமையாக செயல்படுத்துவதற்காக வரும் ஜூலைஒறாம் தேதி முதல் கோயிலுக்குள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையை மிக தீவிரமாக நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படும் பொது தரிசன வரிசை,100 ரூபாய் கட்டணம், விரைவு தரிசன கட்டண வரிசை, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறநாளிகளுக்கான வரிசை போன்ற அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். எனவே பக்தர்கள் கோயிலுக்கு வருகை தரும்போது தங்களது கைபேசிகளை தாங்கள் தங்கியிருக்கும் இடங்களிலோ தங்களது வாகனங்களிலோ பாதுகாப்பாக வைத்துவிட்டு சுவாமி தரிசனம் செய்ய திருக்கோயிலுக்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்கள் தங்கள் செல்போன்களை பாதுகாப்பாக வைப்பதற்காக ஆங்காங்கே கோயில் நிர்வாகம் சார்பில் செல்போன் பாதுகாக்கும் இடங்கள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றை பயன்படுத்தி பக்தர்கள் தங்கள் கைபேசிகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு தரிசனத்துக்கு செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனையின் போது பக்தர்களிடம் கைபேசிகள் இருப்பது கண்டறியப்பட்டால் அவற்றை பரிமுதல் செய்து பாதுகாப்பு பெட்டகங்களில் வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முருகன் கோவிலா... money counter- ஆ...? திருச்செந்தூரில் அமைச்சரிடமே அடாவடி கட்டண வசூல்..!!