பெங்களூரில் வணிக ரீதியான எல்பிஜி (LPG) கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள திடீர் தட்டுப்பாடு, நகரின் உணவு வணிகத் துறையை கடுமையாக பாதிக்கத் தொடங்கியுள்ளது. இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றம் உலக அளவில் எரிபொருள் சப்ளை சங்கிலியை சீர்குலைத்துள்ளது.
இதன் விளைவாக, இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, எல்பிஜி இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வணிக உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர்கள் கிடைப்பது கடினமாகியுள்ளது. பெங்களூரில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள் மட்டுமின்றி, பேயிங் கெஸ்ட் (PG) விடுதிகளும் இந்த நெருக்கடியால் தத்தளிக்கின்றன.

நகரில் சுமார் 15,000-க்கும் மேற்பட்ட PG விடுதிகள் உள்ளன. இவை ஐடி ஊழியர்கள், மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட 10 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தங்குமிடமாகவும், தினசரி மூன்று வேளை உணவு வழங்கும் இடமாகவும் விளங்குகின்றன. இந்த விடுதிகளில் பெரும்பாலானவை கேஸ் சிலிண்டர்களைப் பயன்படுத்தி சமைப்பதால், தட்டுப்பாடு நேரடியாக உணவு வழங்கலை பாதிக்கிறது.
இதையும் படிங்க: போதை மாத்திரை கொடுத்து வன்கொடுமை.... திருப்பூரை சேர்ந்த கல்லூரி மாணவி புகாரால் பெங்களூருவில் பரபரப்பு!
PG உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அருண் குமார், ஊடகத்திடம் கூறுகையில், "தட்டுப்பாடு தொடர்ந்தால் அதிகபட்சம் ஒரு வாரம் மட்டுமே சமையலறைகளை இயக்க முடியும். அதன் பிறகு உணவு சப்ளை நிச்சயம் பாதிக்கப்படும். அரசு உடனடியாக தலையிட வேண்டும்" என்று எச்சரித்துள்ளார். பல PGகள் ஏற்கனவே தங்கள் மெனுவை குறைக்கத் தொடங்கியுள்ளன. ஒரு பிரபல PG உரிமையாளர் கூறுகையில், "எங்களிடம் ஆறு காலி சிலிண்டர்கள் மட்டுமே உள்ளன. புதியவை புக் செய்ய முயன்றும் கிடைக்கவில்லை. இதனால் 3-4 நாட்களுக்கு மேல் சமாளிக்க முடியாது. மெனுவை குறைத்து கூடுதல் நேரம் பிடிக்க முயல்கிறோம்" என்றார்.
பொதுவாக, ஒரு PGயில் குறைந்தது 50 பேருக்கு உணவு தயாரிக்கப்படுவதால், இன்டக்ஷன் அல்லது மின்சார சமையல் கருவிகள் போதுமானதாக இல்லை. பாதுகாப்பு காரணங்களால் அதிக சிலிண்டர்களை சேமித்து வைக்க முடியாது; குறைந்தது மூன்று சிலிண்டர்கள் எப்போதும் தேவை. வெந்நீர் வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இதேநேரம், வணிக ஹோட்டல்கள் சங்கம் இன்று (மார்ச் 10) முதல் பல உணவகங்கள் மூடப்படலாம் என அறிவித்துள்ளது. அரசு, வீட்டு உபயோக LPG-க்கு முன்னுரிமை அளித்து, வணிக உபயோக சப்ளையை கட்டுப்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. GAIL நிறுவன அதிகாரிகள், PNG (பைப்லைன் இயற்கை எரிவாயு) மற்றும் CNG (வாகனங்களுக்கான) சப்ளை தற்போது பாதிக்கப்படவில்லை என்றாலும், நெருக்கடி நீடித்தால் தொழில்துறை மற்றும் வணிகப் பிரிவுகள் முதலில் பாதிக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

PG உரிமையாளர்கள் சங்கம் இன்று அவசரக் கூட்டம் நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கைகளை விவாதிக்கிறது. அரசு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், பெங்களூரின் இளைஞர் சமூகத்தின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த நெருக்கடி உலக அரசியல் பதற்றத்தின் நேரடி விளைவு என்பதால், விரைவில் சர்வதேச அளவில் தீர்வு காணப்பட வேண்டிய அவசியம் உள்ளது.
இதையும் படிங்க: இனி மணிக்கணக்கா உட்கார்ந்து கடலை போட முடியாது..!! பெங்களூரு ரெஸ்டாரண்ட்டுகளில் வருது புது ரூல்..!!