கோடை விடுமுறை முடியும் தருணத்தில் போதிய பேருந்துகளை இயக்காமல் பயணிகளை அல்லாட வைப்பதும், கூட்டத்தைப் பயன்படுத்தி நடத்துநர்கள் ₹150 வரை லஞ்சம் வாங்கும் அளவுக்கு அலட்சியமாகச் செயல்படுவதும்தான் தவெக அரசு முன்வைக்கும் மாற்றமா? என்று பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மிகக் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்துகள் எதுவும் இல்லாததால், கடந்த 10 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்துத் தவெக அரசை விமரிசித்துப் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்துகள் ஏதுமின்றிப் பொதுமக்களை 10 மணி நேரத்திற்கும் மேலாகத் தவிக்கவிட்டு, அவர்களைச் சாலை மறியலில் ஈடுபடும் நிலைக்குத் தவெக அரசு தள்ளியுள்ளது மிகுந்த கண்டனத்திற்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.

கோடை விடுமுறை முடியவிருக்கும் இந்தச் சூழலில், மக்கள் கூட்டத்தை முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்காமல் தவெக அரசு கோட்டை விட்டுள்ளது. அதுமட்டுமன்றி, நிலவும் கூட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு சில நடத்துநர்கள் பயணிகளிடம் ₹150 வரை லஞ்சம் வசூலிக்கும் அளவுக்குப் போக்குவரத்துத் துறை நிர்வாகம் முற்றிலும் சீர்குலைந்துள்ளது. முன்பதிவு செய்த பயணிகளையே பேருந்துகளில் இருந்து இறக்கிவிட்டு கூட்டத்தைக் குறைக்கலாம் என்பது போன்ற வினோதமான விஞ்ஞான் தீர்வுகளை முன்வைப்பதை தவெக அரசு கைவிட வேண்டும்.
இதையும் படிங்க: அதிமுகவுக்கு புற்றுநோய் வந்துவிட்டது, இபிஎஸ் கட்சியை அழித்துவிட்டார் - தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!
இனியாவது மக்களுக்குப் போதிய பேருந்துகளை இயக்குவதற்குத் தவெக போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. தமிழன் பார்த்திபன் அவர்கள் உடனடியாக முன்வர வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பாக வலியுறுத்துகிறேன்" என நயினார் நாகேந்திரன் தனது அறிக்கையில் சாடியுள்ளார். புதிய அரசு பொறுப்பேற்ற சில வாரங்களிலேயே தென் தமிழகத்தின் முக்கியப் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதும், அதற்குப் பாஜக மாநிலத் தலைவர் விடுத்துள்ள இந்தக் கடுமையான விமரிசனமும் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இபிஎஸ் மீது அதிருப்தி - தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் நிர்வாகிகள்!