போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பண மோசடி செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட முக்கிய நபர்கள் மீதான வழக்குகளைத் தனித்தனியாகப் பிரித்து விசாரித்தால் மட்டுமே வழக்கு விரைந்து முடிவடையும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பில் ஆணித்தரமாக வாதிடப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது அரசு வேலை வாங்கித் தருவதாகப் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க உத்தரவிடக் கோரி, பாதிக்கப்பட்ட ஒய். பாலாஜி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், ஜாய்மால்யா பக்ஷி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு இன்று நேரடி விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது மனுதாரர் ஒய். பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் வாதிடுகையில், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான நபர்களோடு சேர்த்து செந்தில் பாலாஜியையும் விசாரிப்பது தேவையற்ற காலதாமதத்தை ஏற்படுத்துகிறது. எனவே, செந்தில் பாலாஜி உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள் மீதான வழக்குகளைத் தனியாகப் பிரித்து விசாரித்தால் மட்டுமே விரைவாக இறுதித் தீர்ப்பை எட்ட முடியும்.
இதையும் படிங்க: மின்துறை முறைகேடு.! செந்தில் பாலாஜி vs நிர்மல் குமார்..!! பேரவையில் பரபரப்பு விவாதம்.!
தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், இவ்வழக்கு விசாரணையில் நியாயமான முன்னேற்றம் ஏற்படும் என நம்புகிறோம் எனக் குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்த செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், நீதிமன்றம் வழக்கை எவ்வாறு பிரித்து விசாரித்தாலும் தங்களது தரப்பு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் சக்தர் வாதிடுகையில், இப்புகார் தொடர்பான வழக்குகளைத் தீவிரமாக நடத்துவதற்காகச் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் வழக்கறிஞர்களை உடனடியாக நியமித்து வழக்கு விசாரணையை விரைந்து முடித்துத் தீர்வு காண அரசு முழு முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் உறுதியளித்தார். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் அமர்வு, இவ்வழக்கு குறித்த விரிவான விசாரணையை வரும் செப்டம்பர் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க: வைஷ்ணவிக்கு பொறுப்பு வழங்கும் திமுக.. செந்தில் பாலாஜி ஆதரவு ஏன்? பரபரக்கும் பின்னணி!