தமிழகத்தின் விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், சென்னை பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய அரசு முழுமையான ஒப்புதலை வழங்கியுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நவீன வசதிகளைத் துவக்கி வைத்துப் பேசிய அவர், தமிழகத்திற்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பட்டியலிட்டார்.
பரந்தூர் பசுமை விமான நிலையம் தொடர்பாக மத்திய அரசு தரப்பிலிருந்து வழங்கப்பட வேண்டிய அனைத்து முழுமையான ஒப்புதல்களையும் நாங்கள் கொடுத்துவிட்டோம். இத்திட்டம் சென்னையின் சர்வதேச இணைப்பை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றும்” எனத் தெரிவித்தார். தமிழகத்தின் மேற்கு மண்டலத் தொழில்துறையினர் மற்றும் பெங்களூரு எல்லைப் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ஓசூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கோவை மாவட்டத்திற்கும், ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்கும் தனி கவனம் செலுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாகவே வான்வழிப் போக்குவரத்தை மேம்படுத்த அதிக நிதி மற்றும் திட்டங்கள் ஒதுக்கப்படுகின்றன என அமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். கோவையில் இன்று ‘உடான் யாத்ரி கஃபே’ (Udaan Yatri Cafe), குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி மற்றும் புவிசார் குறியீடு பெற்ற ‘கோவை கோரா காட்டன்’ விற்பனை நிலையம் ஆகியவற்றை அமைச்சர் தொடங்கி வைத்தார். இதன் மூலம் சாமானியப் பயணிகளுக்கும் மலிவு விலையில் தரமான சிற்றுண்டிகள் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: 2026 சட்டமன்றத் தேர்தல்: அண்ணாமலை மற்றும் எல்.முருகனுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கிய பாஜக
மத்திய இணை அமைச்சர்கள் முரளிதர் மோகல் மற்றும் எல்.முருகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, தமிழகத்தின் விமானப் போக்குவரத்து வரைபடத்தில் மிக முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. பரந்தூர் விமான நிலையத்திற்கு மத்திய அரசின் ‘க்ரீன் சிக்னல்’ கிடைத்துள்ளதால், இனி மாநில அரசின் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறார் ஸ்டாலின்! கோவையில் வானதி சீனிவாசன் ஆவேசம்!