ஈரான்-இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் உலக அளவில் எரிபொருள் சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வளைகுடா பிராந்தியத்தில் இருந்து உலக நாடுகளுக்கு வழங்கப்படும் கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தில் கணிசமான இடையூறு ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் ஈரான் விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, பல்வேறு நாடுகளின் எரிபொருள் ஏற்றுமதிக் கப்பல்கள் தடைபட்டுள்ளன.

இந்தியாவுக்கும் சில கப்பல்கள் மூலம் மட்டுமே எரிபொருள் வந்து சேர்ந்துள்ள நிலையில், எரிசக்தித் தட்டுப்பாட்டைத் தவிர்க்க அரசு பல அவசர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்தச் சூழலில், அமெரிக்கா தொடர்ந்து ரஷிய எண்ணெய் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தபோதிலும், போர் காரணமாக ரஷியாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்ய இந்தியாவுக்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் இந்தியா ரஷிய எண்ணெயை மாற்று வழியாகப் பயன்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: கூடுதல் மண்ணெண்ணெய் முதல் மின்சார மானியம் வரை! சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழக அரசு போட்ட மாஸ்டர் பிளான்!
இருப்பினும், விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இடையூறுகளைச் சமாளிக்க, மத்திய அரசு அடுத்த 60 நாட்களுக்கு அவசர அடிப்படையில் புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. அதன்படி, ரேஷன் கடைகள் மூலம் மீண்டும் மண்ணெண்ணெய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் பயன்பாடு இல்லை என்று அறிவிக்கப்பட்டிருந்த 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இந்த விநியோகம் மீண்டும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என அரசு நம்புகிறது.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில அரசுகள் அடையாளம் காணும் இரண்டு பொதுத்துறை பெட்ரோல் பங்க்குகளில் நேரடியாக மண்ணெண்ணெய் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கான விதிமுறைகளிலும் தற்காலிக தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. பொதுவாக பெட்ரோல் பங்க்குகளில் அதிகபட்சம் 2,500 லிட்டர் மண்ணெண்ணெய் சேமித்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மாநில அரசுகள் தேர்வு செய்யும் மாவட்டத்திற்கு இரண்டு பங்க்குகளில் 5,000 லிட்டர் வரை சேமிப்பு செய்யலாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் பொதுமக்களின் அன்றாடத் தேவைகளைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கைகளாகும். போர் சூழல் நீடித்தால் மேலும் பல்வேறு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: இன்ஸ்டா, ஃபேஸ்புக்கில் இனி NO FAKE அக்கவுண்ட்..!! அதிரடி நடவடிக்கை எடுக்கப்போகும் மத்திய அரசு..!!