நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை முன்னிறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தின் மத்தியில், கரப்பான்பூச்சி மக்கள் கட்சி (சிஜேபி) நிறுவனர் அபிஜீத் தீப்கே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு டைபாய்டு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சிஜேபி தலைமையில் கடந்த ஜூன் 20 முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு அபிஜீத் தீப்கே நேரடியாக தலைமை வகித்து வருகிறார்.
தொடர்ச்சியாக பல வாரங்களாக போராட்டக் களத்திலேயே தங்கி செயல்பட்டு வந்த அபிஜீத் தீப்கே, கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தனக்கு டைபாய்டு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நீட் போராட்டத்துக்கு பெற்றோர் தங்களது குழந்தைகளை அனுப்ப வேண்டாம்! பலிகடாவாக்காதீர்கள்! நடிகர் ரஞ்சித் சாடல்!

அந்த வீடியோவில் பேசிய அவர், கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததாகவும், மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு டைபாய்டு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் கூறினார். இருப்பினும், தனது உடல்நிலை காரணமாக போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என்றும் உறுதியளித்தார்.
மேலும், நாடு முழுவதும் இந்த இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்களில் பங்கேற்று வரும் இளைஞர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். போராட்டத்தில் இணைந்திருக்கும் அனைவரின் ஆதரவும் தமக்கு மன உறுதியை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அபிஜீத் தீப்கே தொடங்கிய "கரப்பான்பூச்சி மக்கள் கட்சி" என்ற பெயர், இளைஞர்களை "கரப்பான்பூச்சிகள்" என்று குறிப்பிட்டதாக கூறப்பட்ட கருத்தை எதிர்த்து உருவாக்கப்பட்ட சமூக ஊடக இயக்கமாகும். பின்னர் இந்த இயக்கம் நீட் தேர்வு, மாணவர் நலன் மற்றும் கல்வி தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் கவனம் பெற்ற இயக்கமாக வளர்ந்துள்ளது.
இதற்கிடையில், டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்நோக்கி மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றன. அபிஜீத் தீப்கே உடல்நலக்குறைவிலும் போராட்டத்தை தொடருவதாக அறிவித்திருப்பது இந்த விவகாரத்தில் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: டெல்லி போராட்டத்தில் கிரிமினல் குற்றவாளிகள்?! தீயாய் பரவும் வீடியோ! 2,500 பேரை அடையாளம் கண்டது போலீஸ்!