சென்னை திருவொற்றியூர் பகுதியில் அரசுப் பள்ளி அருகே சக மாணவர்கள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவொற்றியூர் வசந்தா நகர் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர், அங்குள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், அதே பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் மற்றொரு மாணவர் மற்றும் அவரது நண்பர்கள் 10 பேர் கொண்ட கும்பல், மாணவர் தனுஷை பள்ளி முடிந்து வெளியே வந்த போது திருவொற்றியூர் பேருந்து நிலையம் அருகே அழைத்துச் சென்றுள்ளது. அங்கு இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், அந்த மாணவர்கள் ஒன்று சேர்ந்து தனுஷைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்து மயக்கமடைந்த மாணவர் தனுஷ், மூச்சுப் பேச்சின்றி கீழே சரிந்து விழுந்ததைக் கண்ட தாக்குதல் நடத்திய மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து நாலாபுறமும் தப்பி ஓடிவிட்டனர். உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவொற்றியூர் காவல் துறையினர், உயிருக்குப் போராடிய மாணவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் மாணவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து மாணவரின் உடலை உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்த திருவொற்றியூர் போலீசார், இக்கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன், தப்பியோடிய மாணவர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டப்பகலில் பள்ளி வளாகம் அருகே நடந்த இந்த பயங்கரச் சம்பவம் பொதுமக்கள் மத்தியிலும் சக மாணவர்களிடையேயும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.