சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யின் அலுவலகம் புதிய இடத்திற்கு மாற்றப்படவுள்ள நிலையில், அதற்கான நிர்வாக வசதிகளை ஏற்படுத்தும் பணிகளுக்கு ரூ.5 கோடியே 54 லட்சம் மதிப்பீட்டில் டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது புனித ஜார்ஜ் கோட்டையின் பிரதான கட்டடத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சர் அலுவலகம், அதே வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்திற்கு மாற்றப்பட உள்ளது.
இடப்பற்றாக்குறை மற்றும் நிர்வாக வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் முதலமைச்சரின் நிர்வாக அலுவலக வசதிகளுக்காக மூன்று பிளாக்குகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு பொதுப்பணித்துறை மின்னணு ஒப்பந்தப்புள்ளிகளை அழைத்துள்ளது.

பிளாக் 1-ல் நிர்வாக அலுவலக வசதிகளை ஏற்படுத்தும் பணிக்கு ரூ.2.41 கோடி, பிளாக் 2-க்கு ரூ.2.01 கோடி மற்றும் பிளாக் 3-க்கு ரூ.1.12 கோடி என மொத்தம் ரூ.5.54 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று பணிகளையும் ஒப்பந்ததாரர்கள் மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பொதுப்பணித்துறையில் பதிவுபெற்ற தகுதியான ஒப்பந்தக்காரர்கள் மட்டுமே இந்த டெண்டரில் பங்கேற்க முடியும். ஒப்பந்தப்புள்ளி தொடர்பான ஆவணங்களை அரசின் மின்னணு டெண்டர் இணையதளத்தில் இலவசமாகப் பெறலாம்.
இதையும் படிங்க: ஆணவ படுகொலைகள்..! தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை..!! அமைச்சர் வன்னியரசு உத்தரவு..!!
மின்னணு முறையில் டெண்டர் விண்ணப்பங்களை செப்டம்பர் 1ஆம் தேதி மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதே நாள் மாலை 4 மணிக்கு டெண்டர்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பணிகள் நிறைவடைந்த பிறகு முதலமைச்சர் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் முழுமையாகச் செயல்படத் தொடங்கும். இதன் மூலம் முதலமைச்சருக்கும் உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "முதல்வராக முதன்முறையாக"..! சுதந்திர தின கொண்டாட்டம்..! கோட்டையில் தேசியக் கொடி ஏற்றும் முதல்வர் விஜய்..!!