நிதித்துறை மற்றும் மின்சார வாரியம் உள்ளிட்ட துறைகளின் வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ள தவெக அரசு, மேலும் 32 முக்கியத் துறைகளுக்கான தனித்தனி வெள்ளை அறிக்கைகளை அடுத்தடுத்து வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முந்தைய திமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் ஊழல்களால் தான் அரசுக்கு நிதி நெருக்கடியும், வருவாய் பற்றாக்குறையும் ஏற்பட்டதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்த நிதி நெருக்கடியின் காரணங்களை மக்களிடம் எடுத்துரைப்பதற்கும், முந்தைய ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை வெளிக்கொணர்வதற்கும் வெள்ளை அறிக்கைகள் வெளியிடப்படும் என்று அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதன்படி, முதற்கட்டமாக நிதித்துறை மற்றும் மின்சார வாரியத்தின் வெள்ளை அறிக்கைகளை அந்தந்தத் துறைகளின் அமைச்சர்கள் வெளியிட்டனர். அவற்றில் நிதி தொடர்பான முறைகேடுகள் குறித்த பல்வேறு புள்ளிவிவரங்கள் இடம்பெற்றிருந்தன.
இதையும் படிங்க: பெரம்பூர் மக்களுக்கு SPECIAL APP..! குடிநீர் முதல் சாலை வரை..! CM விஜய் அதிரடி நடவடிக்கை..!

இந்நிலையில், அரசின் செயலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் பட்ஜெட் தாக்கல் தொடர்பாக முதலமைச்சர் விஜய் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார். அதற்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடனான இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது.
அந்த மாநாட்டில் பங்கேற்கும் மாவட்ட ஆட்சியர்களும், காவல்துறை அதிகாரிகளும் தங்களது மாவட்டங்களில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து விளக்கமளித்தனர். அதன் அடிப்படையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட தவெக அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மாநாடு முடிந்ததும் துறைவாரியான ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, அதன் அடிப்படையில் ஜூலை மாத இறுதியில் பட்ஜெட்டை தாக்கல் செய்யலாம் என்று அதிகாரிகள் முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்கினர். அதனை முதலமைச்சர் விஜய் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது வெள்ளை அறிக்கைகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள இரண்டு வெள்ளை அறிக்கைகளும் மக்களிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், "எல்லா துறைகளிலும் முந்தைய ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. எனவே முக்கியத் துறைகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்து துறைவாரியாக தனித்தனி வெள்ளை அறிக்கைகளை வெளியிடலாமே?" என்று முதலமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டதாக கூறப்படுகிறது.
அதற்கு அதிகாரிகள், "முதலமைச்சர் விரும்பினால் நிச்சயமாக வெளியிடலாம்" என்று தெரிவித்ததைத் தொடர்ந்து, அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, மூன்றாவது வெள்ளை அறிக்கையாக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறையின் வெள்ளை அறிக்கையை வெளியிட அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் பதிவுத்துறை அமைச்சராக இருந்த மூர்த்தி பதவி வகித்த காலகட்டத்தில் பதிவுத்துறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக அப்போதே குற்றச்சாட்டுகள் எழுந்தன. பத்திரப் பதிவு தொடர்பான ஊழல்கள் குறித்து மாநில மற்றும் மத்திய அரசுகளிடம் ஏராளமான புகார்கள் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில், முந்தைய ஆட்சிக் காலத்தில் பதிவுத்துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்த வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பதிவுத்துறையைத் தொடர்ந்து போக்குவரத்து, கனிமவளம், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, உயர்கல்வி, பள்ளிக்கல்வி, உள்ளாட்சித் துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை, இந்து சமய அறநிலையத் துறை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) உள்ளிட்ட முக்கியத் துறைகளுக்கும் குறிப்பிட்ட இடைவெளியில் வெள்ளை அறிக்கைகள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட தமிழகம் முழுவதும் உள்ள 25 மாநகராட்சிகளுக்கும் தனித்தனியாக வெள்ளை அறிக்கைகள் வெளியிடுவது குறித்தும் முதலமைச்சர் விஜய் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டிய சூழல் நிலவுவதால், கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநகராட்சிகளின் செயல்பாடுகள் மற்றும் நிதி நிலைமை குறித்து மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில், தேர்தலுக்கு முன்பாக இந்த வெள்ளை அறிக்கைகளை வெளியிடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
நகர்ப்புற வளர்ச்சித் துறையின் வெள்ளை அறிக்கையில் மாநகராட்சிகள் தொடர்பான விவரங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாலும், ஒவ்வொரு மாநகராட்சியும் தனித்தனி பட்ஜெட் தாக்கல் செய்வதுடன், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான டெண்டர்களையும் வழங்கி வருவதாலும், ஒவ்வொரு மாநகராட்சிக்கும் தனித்தனி வெள்ளை அறிக்கை வெளியிடுவது அவசியம் என்ற கருத்தும் அதிகாரிகள் மத்தியில் நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு மாநகராட்சி வாரியாக வெள்ளை அறிக்கைகள் வெளியிடப்பட்டால், அது மக்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, உள்ளாட்சித் தேர்தலிலும் அரசுக்கு அரசியல் ரீதியாக சாதகமான சூழலை உருவாக்கும் என்றும், முந்தைய ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து மக்களிடம் விவாதத்தை ஏற்படுத்தும் என்றும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் திமுக அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், துறைவாரியாகவும், மாநகராட்சி வாரியாகவும் வெள்ளை அறிக்கைகளை வெளியிட்டு, முந்தைய ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் அடுத்தகட்ட நடவடிக்கையில் முதலமைச்சர் விஜய் தீவிர கவனம் செலுத்தி வருவதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், முந்தைய ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல்களின் மொத்த மதிப்பை எண்களுடன் வெளியிட்டு, அதன் மூலம் அரசியல் ரீதியாக மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவது அரசின் நீண்டகாலத் திட்டமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: CBI கேட்பீங்களா..? எதிர்க்கட்சிகளை மிரட்டுவீங்களா.? சொல்லுங்க CM..! விளாசிய அப்பாவு..!!