திருச்சி: மூக்கு வலி காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நர்சிங் மாணவி சீதாலட்சுமி தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மர்ம மரணத்தை விசாரிக்க உயர்மட்ட குழு அமைத்து முதல்வர் விஜய் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
மூக்கு வலியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதாலட்சுமியின் வயிறு கிழிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக சக மாணவிகளும் குடும்பத்தினரும் குற்றம் சாட்டினர். இந்த சம்பவத்துக்கு நீதி கோரி மாணவிகள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் துணை சபாநாயகர் ரவிசங்கர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவியின் மரணம் தொடர்பாக உண்மையை கண்டறிய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
இதையும் படிங்க: முதல்வர் விஜய்க்கு நன்றி! அவரை நேரில் சந்திக்க வேண்டும்! யூடியூபர் சவுக்கு சங்கர் விருப்பம்!

முதல்வர் விஜய்யின் உத்தரவின்படி, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் பாஸ்கர் தலைமையில் நான்கு பேர் கொண்ட உயர்மட்ட மருத்துவ விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் டாக்டர் பாரதி மோகன், டாக்டர் சண்முகசுந்தரம் மற்றும் டாக்டர் ஜெயபிரகாஷ் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழு சம்பவத்தின் உண்மை நிலையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. சீதாலட்சுமியின் மரணத்துக்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சையே காரணம் என சக மாணவிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனைகளில் நடைபெறும் சிகிச்சைகளின் தரம் மற்றும் பொறுப்புணர்வு குறித்து பொதுமக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன. முதல்வர் விஜய்யின் இந்த உடனடி நடவடிக்கை மாணவியின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக் குழு அறிக்கை வரும் வரை இந்த விவகாரம் தொடர்ந்து பரபரப்பாக இருக்கும் என அரசியல் மற்றும் சமூக வட்டாரங்கள் கருதுகின்றன.
இதையும் படிங்க: சிங்கப்பெண் சிறப்பு படைக்கு பிரத்யேக சீருடை!! முதல் கையெழுத்தில் மாஸ் காட்டிய முதல்வர் விஜய்!!