கர்நாடக முதலமைச்சரை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சந்திக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். காவிரி விவகாரத்தில் விஷப்பரீட்சை வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளார். கடந்த காலங்களில் காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற யோசனை சொல்லப்பட்டபோதெல்லாம், அதனை உறுதியாகத் திராவிட முன்னேற்றக் கழக அரசு நிராகரித்தது என்றும் கூறினார்.
உரிமையை நிலைநாட்டுவதாக இல்லாமல் பிரச்சினையை இழுப்பதாகவே அப்பேச்சுவார்த்தைகள் அமையும் என அவர் கூறியுள்ளார். இந்நிலையில், கர்நாடகம் சென்று அம்மாநில முதலமைச்சருடன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார் என வேளாண்துறை அமைச்சரே தெரிவித்திருப்பது விவசாயிகள் மத்தியில் பெருங்கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இது தமிழ்நாடு அரசின் 30 ஆண்டுகாலச் சட்டப் போராட்டத்தைச் சிதைப்பதாக அமைந்துவிடும் என்று கூறிய அவர், கர்நாடகம் விரித்திருக்கும் சதிவலையில் வலியச் சென்று தமிழ்நாடு முதலமைச்சர் சிக்குவது ஏன் என கேள்வி எழுப்பினார். கர்நாடக மாநிலத்தை ஆள்வது காங்கிரஸ். தமிழ்நாடு அரசிலும் காங்கிரஸ் கட்சி பங்கு வகிக்கிறது. எனவே கண்துடைப்புக்காக இதுபோன்ற பேச்சுவார்த்தை நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என கேட்டு உள்ளார்.
இதையும் படிங்க: பாமக நிறுவனர் ராமதாஸூக்கு 88-வது பிறந்தநாள் இன்று.. முதலமைச்சர் விஜய் வாழ்த்து..!!
காவிரி நீர் உரிமையின் ஆழ அகலங்களைப் புரிந்துகொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் தனது செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் காவிரி போன்ற தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினைகளில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனையையும், விவசாயச் சங்கங்களின் கருத்துகளையும் பெற்ற பின்பே செயல்பட வேண்டும் எனவும் காவிரி உரிமை தொடர்பாகப் பேச்சுவார்த்தைக்குக் கர்நாடகம் செல்லும் தவறான முயற்சியை முதல்வர் விஜய் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: “எக்காரணம் கொண்டும் இதை செய்யாதீங்க...” - அதிகாரிகளுக்கு வார்னிங் கொடுத்த அமைச்சர் ஜெகதீஷ்வரி...!