தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ள பல்வேறு முக்கியக் கேள்விகளுக்கு முதலமைச்சர் நாளை நேரில் விளக்கமளிப்பார் என்றும், சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) வழியாகச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள கடல்வழி ரோப் கார் திட்டத்தில் உள்ள தொழில்நுட்பச் சிக்கல்கள் குறித்துப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள அக்கரை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ‘மஞ்சள்’ உணவகத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று புதிய உணவகத்தை ரிப்பன் வெட்டித் திறந்து வைத்த பின்னர் அமைச்சர் ஸ்ரீநாத் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் பல கேள்விகளுக்கும், தனது துறை சார்ந்த விவகாரங்களுக்கும் முதலமைச்சர் என்ற முறையில் சி. ஜோசப் விஜய் பதிலளிப்பதில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகிறார்களே? எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஸ்ரீநாத், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ள கேள்விகள் அனைத்திற்கும் முதலமைச்சர் நாளைய கூட்டத்தொடரில் விரிவாகவும் தெளிவாகவும் பதில் அளிப்பார் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். தொடர்ந்து ஈசிஆர் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் திட்டங்கள் குறித்துப் பேசிய அவர், கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகக் கடல் மார்க்கமாகச் செல்லக்கூடிய பிரம்மாண்ட ரோப் கார் திட்டத்தில் சில தொழில்நுட்ப ரீதியான சிக்கல்கள் இருப்பதாகவும், அது தொடர்பாகத் துறை ரீதியான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதால் விரைவில் சாதகமான நல்ல முடிவு பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: சட்டமன்றமே ரீல்ஸ்-க்காக நடத்தப்படுகிறதா? தவெக அரசை விளாசிய கனிமொழி எம்பி!
மேலும், சட்டப்பேரவையில் நடைபெற உள்ள மீன்வளத்துறை மானியக் கோரிக்கையின் போது மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும், தமிழகத்தின் மீன் அங்காடிகளை நவீனத் தரத்துடன் மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு புதிய மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகளை அரசு வெளியிட உள்ளதாகவும் அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரூ.125 கோடி திட்டம்... கோயில்களுக்கு மெகா அப்டேட்..! அமைச்சர் ரமேஷ் அதிரடி..!!