கர்நாடக வனத்துறையினரால் தமிழர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக பாஜக நாடகமாடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி வலியுறுத்தியுள்ளார்.
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கள்ளிக்குடி பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை, கிராம சாவடியை திறந்து வைத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தைச் சேர்ந்தவர்களை கொடூரமான முறையில், தீவிரவாதியைப் போல சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறை அதிகாரிகள் மீது கடுமையான கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தவறான காரியம் செய்த அதிகாரிகளைக் காப்பாற்ற கர்நாடக அரசு எந்த முயற்சியும் செய்யக்கூடாது. இதுதொடர்பாக கர்நாடக வனத்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ₹15 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ள கர்நாடக அரசின் நடவடிக்கை பாராட்டத்தக்கது.
காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரவிருந்த சூழலில்தான், கர்நாடக அரசு அவசர அவசரமாக கபினி அணையில் இருந்து 12,000 கியூசெக்ஸ் தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளது. தமிழக முதல்வர் இப் பிரச்சினையைச் சட்டரீதியாக மிகச் சரியாகக் கையாண்டு வருகின்றனர். தமிழகத்தின் உரிமைகளுக்காகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒரு சதவீதம் கூட சமரசம் செய்துகொள்ளாமல் 100 சதவீதம் உறுதியோடு போராடும்.
கர்நாடக பாஜக தலைவர்களான எடியூரப்பா மற்றும் அவரது மகன் விஜயேந்திரா ஆகியோர் கபினி அணைக்கே சென்று, தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்கக் கூடாது எனப் போராட்டம் நடத்துவது மனிதநேயமற்ற வக்ர புத்தியாகும். தண்ணீர் வரவில்லை என்றால் காங்கிரஸ்தான் காரணம் என்று குற்றம் சாட்டும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழகத்திற்குத் தண்ணீர் திறப்பதைத் தடுக்கும் கர்நாடக பாஜகவைக் கண்டிக்காமல் மௌனம் காப்பது ஏன்? பாட்டியாலா நீதிமன்றத்தில் அன்புமணி மீது சிபிஐ வழக்கு நிலுவையில் இருப்பதால்தான், அவர் பாஜகவின் பொம்மலாட்டப் பொம்மையைப் போலச் செயல்படுகிறார். கர்நாடக பாஜகவைக் கேள்வி கேட்கத் தமிழக பாஜக தலைவர்களான நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் போன்றோருக்கும் தைரியமில்லை.
இதையும் படிங்க: “தென் மாநிலங்களுக்கு துரோகம்!” தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக–காங்கிரஸ் மோதல்!
போதை இல்லாத தமிழ்நாடு வேண்டும். தமிழகத்தில் கடந்த 10 முதல் 15 ஆண்டுகளாக போதைப்பொருள் புழக்கம் தீவிரமடைந்துள்ளது. நகரங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள் வரை கொக்கைன் மற்றும் போதை மாத்திரைகளின் விற்பனை ஊடுருவியுள்ளது. பல ஆண்டுகளாக புரையோடிப்போன இந்தப் பிரச்சினையை ஒரே நாளில் சீர்திருத்த முடியாது என்றாலும், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு சரியான திசையில் முதற்கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தமிழ்நாடு போதை மாநிலமாக மாறிவிடக் கூடாது என்பதில் அரசு கூடுதல் கவனத்துடன், மேலும் வேகமாகவும் தீவிரமாகவும் செயல்பட்டுத் தனது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி தெரிவித்தார்
இதையும் படிங்க: பேனர்களில் கோஷ்டி தலைவர்கள் படங்களுக்கு தடை! தமிழக காங்கிரசில் அதிரடி உத்தரவு!