மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, பா.ஜ.க.வின் மக்களவை வெற்றியை கடுமையாக விமர்சித்துள்ளார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்ற 240 எம்.பி.க்களில், ஒவ்வொரு ஆறில் ஒருவர் வாக்கு திருட்டு மூலம் வெற்றி பெற்றதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “வாக்கு திருட்டு மூலம் சில நேரங்களில் தனிநபர்களின் இடங்கள் திருடப்படுகின்றன. ஆனால், மறுபுறம் ஒரு முழு அரசாங்கமே திருடப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

பா.ஜ.க.வின் 240 எம்.பி.க்களில் சுமார் 40 பேர் (ஒவ்வொரு 6-வது எம்.பி.) வாக்கு திருட்டு மூலம் வெற்றி பெற்றிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்த எம்.பி.க்களை அடையாளம் காண்பது கடினமல்ல என்றும், பா.ஜ.க.வின் சொந்த மொழியில் அவர்களை ‘ஊடுருவல்காரர்கள்’ (infiltrators) என்று அழைக்கலாம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். மேலும், ஹரியானா மாநிலத்தை உதாரணமாகக் குறிப்பிட்ட அவர், “அங்கு ஒட்டுமொத்த அரசாங்கமே ஒரு ஊடுருவல்காரர்தான்” என்று விமர்சித்தார்.
இதையும் படிங்க: ஏப்.29ம் தேதிக்கு பிறகு.. பெட்ரோல், டீசல் விலை தாறுமாறா உயரப்போகுது..!! ராகுல்காந்தி வார்னிங்..!!
தேர்தல் நேர்மையாக நடைபெற்றிருந்தால் பா.ஜ.க. 140 இடங்களைக்கூட வெற்றி பெற்றிருக்காது என்று ராகுல் காந்தி வலியுறுத்தினார். இந்தக் குற்றச்சாட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு காங்கிரஸ் தரப்பில் தொடர்ந்து வரும் விமர்சனங்களின் தொடர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க. தரப்பில் இதுவரை முறையான பதில்கள் வராத நிலையில், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திலும் வெளியிலும் தீவிரமாக எடுத்துச் செல்லத் தயாரிப்பு செய்து வருகின்றன.

ராகுல் காந்தியின் இந்தக் கருத்து, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், வாக்கு எண்ணிக்கை நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்த விவாதங்களை மீண்டும் முன்னுக்கு கொண்டு வரும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். கடந்த சில மாதங்களாகவே எதிர்க்கட்சிகள் வாக்கு முறைகேடு, இ.வி.எம். மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், ராகுலின் இந்தப் பதிவு முக்கியத்துவம் பெறுகிறது.
பா.ஜ.க.வோ, தேர்தல் முடிவுகள் மக்களின் தீர்ப்பு என்றும், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்றும் நிராகரித்து வருகிறது. இருப்பினும், ராகுல் காந்தியின் இந்த தொடர் தாக்குதல், எதிர்கால அரசியல் விவாதங்களில் முக்கிய இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தொடர் அதிருப்தி..!! தேர்தல் பிரசாரத்தை புறக்கணிக்கிறாரா ராகுல்காந்தி..?? தமிழக அரசியலில் பரபரப்பு..!!