தமிழக அரசியலில் நீர்க்குமிழியாக மட்டுமே நடிகர் விஜய் இருப்பார் என சேலத்தில் நடந்த திமுக கூட்டணி கட்சியின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் பேசினார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க கூட்டம் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் பொதுக்கூட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கலந்து கொண்டு பேசுகையில், “அமெரிக்க, இஸ்ரேல் கூட்டு நடவடிக்கையால், இன்று உணவு உற்பத்தி இழப்பு , வேலை இழப்பு , தொழில் பாதிப்பு, காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு என பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் பல தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். எனக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என்று விஜய் கூறுவது வேடிக்கையாக உள்ளது. பாஜக மற்றும் அதிமுக-வை பற்றிப் பேச விஜய் மறுத்து வருகிறார்.
சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கு இவங்க அவங்க காரணம் என பட்டும் படாமல் பேச்சு வருகிறார். எரிவாயு தட்டுப்பாட்டுக்கு மோடி தான் காரணம் என விஜய் பேசுவதற்கு அச்சப்படுகிறார்.
விஜய் நடித்துக் கொண்டிருந்தபோது பல்வேறு இடங்களுக்கு படப்பிடிப்புக்கு சென்று இருப்பார். அப்போதெல்லாம் படப்பிடிப்பு இடத்தில் எந்த சலசலப்பும் ஏற்படவில்லை. அதேபோல், சமீபத்தில் தலைமை செயலகம் வந்தபோது, எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. ஆனால், தேர்தல் பரப்புரையில் மட்டும் பெரிய அளவிலான பிரச்னைகள் ஏற்படுகிறது என்றால் சீன் கிரியேட் பண்ணுகிறார் என்று தான் அர்த்தம். இதனை ஏதோ ஒரு கம்பெனி அவருக்காக செய்து கொடுக்கிறது.
இதையும் படிங்க: பணம் கொடுத்தா வாங்கிக்கோங்க... விஜய் மீது நடவடிக்கை எடுக்கணும்... சிபிஐ வீரபாண்டியன் வலியுறுத்தல்..!!
தமிழக அரசியலில் நீர்க்குமிழியாக மட்டுமே நடிகர் விஜய் இருப்பார். நீர்க்குமிழி தோன்றும் போது அழகாக இருக்கும். ஆனால், ஓரிரு நிமிடங்களிலேயே அது மறைந்து போகும். இந்த தேர்தலில் தவெக முழுமையாக தோற்கடிக்கப்படும். தமிழக அரசியிலில் விஜயால் நிரந்தரமான இடத்தை பிடிக்க முடியாது. தமிழக மக்கள் முன்னேற்றத்திற்கான எந்தவொரு மாற்று திட்டத்தையும் சொல்லத் தெரியாத விஜய் , திமுக ஒரு தீய சக்தி என பஞ்ச் டயலாக் மட்டுமே பேசுகிறார். இவரை அவர் ரசிகர்கள் கண்ணை மூடிக்கொண்டு வெறித்தனமாக ஆதரிப்பது மிகவும் ஆபத்தானது. தமிழகத்தில் புறக்கணிக்க வேண்டிய சக்தியாக விஜய் உள்ளார்.
அதேபோல விவசாயிகள், இஸ்லாமியர்கள், பொதுமக்கள் என பாஜக அரசு கொண்டு வந்த மக்கள் விரோத திட்டங்களுக்கு அதிமுக ஆதரவளித்ததின் விளைவாக இன்று விவசாயிகளும் பொதுமக்களும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். பாஜகவோடு சேர்ந்து கொண்டு தமிழகத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி தீங்கு விளைவித்து வருகிறார். பதவி ஆசையில் சுயநலத்தோடு செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிச்சாமியை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர் திமுக தேர்தல் அறிக்கை , டாப் ஸ்டார் ஆக உள்ளது. விவசாயிகளுக்கு மீட்டர் இல்லாத மின் இணைப்பு காலை உணவு திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவாக்கம் இல்லத்தரசிகளுக்கு வீட்டுக்கு தேவையான மின்சாதன பொருட்கள் வாங்க 8,000 டோக்கன் என பல்வேறு திட்டங்கள் மக்களை கவர்ந்துள்ளது.தேர்தல் அறிக்கை என்பது ஒரு சடங்காக இல்லாமல் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பயனாக அமைந்துள்ளது. எனவே திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் வாக்களித்து தமிழக முதல்வராக ஸ்டாலினை மீண்டும் அமர்த்த வேண்டும் என்று சண்முகம் கேட்டுக் கொண்டார்.
இதனை தொடர்ந்து , தமிழக சுற்றுலாத்துறை அமைச்சரும், சேலம் வடக்கு தொகுதி திமுக வேட்பாளருமான ராஜேந்திரன் பேசும்போது , இந்த தேர்தல் தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் நடக்கும் சட்டப்பேரவை தேர்தலாகும் மதவெறிக்கும் மதசார்பின்மைக்கும் நடக்கும் தேர்தலாகும். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மதவெறி கொண்டவர்கள் ஒரு அணியாகவும் , திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மதசார்பின்மை கொண்டவர்கள் ஒரு அணியாகவும் நிற்கிறோம் ஆர்எஸ்எஸ் , விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற சக்திகளின் சூழ்ச்சியை வீழ்த்தி இந்த தேர்தலில் அபார வெற்றியை அடைய உள்ளோம்.
முதலமைச்சர் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை டாப் ஸ்டார் அறிக்கை ஆகும்.
அடுத்த ஐந்தாண்டு கால ஆட்சியில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். எனது கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவே போற்றும் வகையில் பல்வேறு சாதனை திட்டங்களை நிறைவேற்றித் தந்த , திமுக கூட்டணிக்கு ஆதரவளித்து , வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: "நிர்பந்தப்படுத்த திமுக ஒன்றும் பாஜக அல்ல... நாங்களும் அதிமுக அல்ல...” - ஒரே போடாய் போட்ட முத்தரசன்...!