தமிழகம் முழுவதும் உள்ள 200-க்கும் மேற்பட்ட முக்கிய கோவில்களில் காலியாக உள்ள அறங்காவலர் பதவிகளை நிரப்பும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இந்த பதவிகளை பெற ஆளும் கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக அதிக வருமானம் உள்ள முக்கிய கோவில்களின் அறங்காவலர் பதவிகளுக்கு அதிக ஆர்வம் காணப்படுவதால், இந்த விவகாரம் அரசியல் மற்றும் ஆன்மிக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறநிலையத்துறை சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி, முதற்கட்டமாக 214 முக்கிய கோவில்கள் மற்றும் 27 சிறப்பு நிர்வாகத் திட்ட கோவில்களில் காலியாக உள்ள அறங்காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இந்த பதவிகளுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: அறநிலைய அமைச்சருக்கு காத்திருக்கும் சவால்!! அறங்காவலர்கள், தக்காருக்கு கோவில் நிர்வாகத்தில் சுதந்திரம்?!
கோவில் அறங்காவலர் பதவி என்பது நிர்வாக பொறுப்புடன் மட்டுமல்லாமல், சமூக அந்தஸ்தையும் வழங்கும் முக்கியமான பதவியாக கருதப்படுகிறது. குறிப்பாக ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக உள்ள ‘ஏ கிரேடு’ கோவில்களில் அறங்காவலராக நியமிக்கப்படுபவர்களுக்கு உள்ளூர் அளவில் குறிப்பிடத்தக்க செல்வாக்கும் மரியாதையும் கிடைக்கும் என்பதால், இந்த பதவிகளுக்கான போட்டி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், அதிகாரப்பூர்வமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தாலும், சில முக்கிய பதவிகளுக்கு அரசியல் பரிந்துரைகளின் அடிப்படையில் தனிப்பட்ட பட்டியல்கள் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அறங்காவலர் குழுவில் கட்டாயமாக இடம்பெற வேண்டிய பெண் உறுப்பினர் மற்றும் பட்டியலினத்தைச் சேர்ந்த உறுப்பினர் தேர்விலும் அரசியல் முக்கியத்துவம் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த சூழலில், ஆன்மிக அன்பர்கள் மற்றும் பக்தர்கள் பலரும் கவலை தெரிவித்துள்ளனர். அறங்காவலர் பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஆன்மிக நாட்டம், கோவில் நிர்வாக அனுபவம் மற்றும் நல்ல நற்பெயர் இருக்க வேண்டும் என்பது அறநிலையத்துறையின் அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். குற்றப் பின்னணி இல்லாதவர்கள் மட்டுமே இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அரசியல் ஆதிக்கத்தின் அடிப்படையில் மட்டுமே நியமனங்கள் செய்யப்பட்டால், கோவில்களின் பாரம்பரியம், நிர்வாக வெளிப்படைத்தன்மை மற்றும் ஆன்மிக மாண்பு பாதிக்கப்படும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. எனவே, தகுதி, நேர்மை மற்றும் பக்தி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அறங்காவலர்களை அரசு தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பிலிருந்தும் வலுத்து வருகிறது.
இதையும் படிங்க: கோவில்களில் முறைகேடா..? "மெயில் போடுங்க"..! அமைச்சர் ரமேஷ் அறிவுரை..!