மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ள திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்த மசோதா - 2026-ஐ உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPIM) கோரிக்கை விடுத்துள்ளது. இந்தத் திருத்தங்கள் திருநங்கைகளின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு (Politburo) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2014-ல் நல்சா (NALSA) vs மத்திய அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, ஒரு நபர் தனது பாலின அடையாளத்தைத் தானே தீர்மானிக்கும் உரிமை உறுதி செய்யப்பட்டது. ஆனால், தற்போதைய திருத்த மசோதா இந்த உரிமையை முற்றிலுமாகச் சிதைப்பதாக சிபிஐ(எம்) சாடியுள்ளது.

பாலின அடையாளத்தை உறுதி செய்ய மருத்துவ வாரியத்தின் சான்றிதழ் கட்டாயம் என்ற அம்சம், திருநங்கைகளை அதிகாரத்துவ மற்றும் மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்துகிறது. இது தனிமனித கண்ணியம் மற்றும் தனியுரிமைக்கு எதிரானது என அறிக்கை குறிப்பிடுகிறது.
இதையும் படிங்க: மத்திய அரசு என்ன செய்ய போகிறது? சிலிண்டர் தட்டுப்பாட்டில் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் நேரடி கேள்வி!
2019-ஆம் ஆண்டு சட்டத்தில் திருநம்பிகள், திருநங்கைகள் மற்றும் பாலின அடையாளங்களைக் கடந்தவர்கள் எனப் பரந்த அளவில் இருந்த வரையறை, தற்போது மிகவும் குறுகியதாக மாற்றப்பட்டுள்ளது. இது திருநம்பிகள் மற்றும் பாலினத் திரவத்தன்மை கொண்டவர்களைப் பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேற்றும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சமூகத்தினரிடமோ அல்லது அது தொடர்பான அமைப்புகளிடமோ முறையான ஆலோசனைகளை நடத்தாமல் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மசோதாவைக் கொண்டு வருவதை ஏற்க முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
பிற்போக்குத்தனமான மற்றும் மனிதாபிமானமற்ற இந்த மசோதா, திருநங்கைகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்று தெரிவித்துள்ள சிபிஐ(எம்), இத்திட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்திப் போராட்டங்களை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: இனி Tuticorin அல்ல Thoothukudi... தூத்துக்குடி விமான நிலைய பெயர் மாற்றத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!