தமிழ்நாடு அரசியலில் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், திமுக மற்றும் அதிமுக தலைவர்கள் ஒரே நாளில் ஆளுநரை சந்தித்தது அரசியல் ரீதியாக பல கேள்விகளை எழுப்புவதாகக் கூறினார். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்த நிலையில், சண்முகம் அதற்கும் கடும் எதிர்வினை ஆற்றியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த பெ.சண்முகம், ஆளுநர் பதவியே தேவையில்லை என்று கூறிவந்த திமுகவும் அதிமுகவும் ஒரே நாளில் ஆளுநரை சந்தித்திருப்பது அரசியல் ரீதியாக பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது என்றார். ஆளுநர் அரசியல் சாசன வரம்புக்குள் செயல்பட வேண்டும் என்றும், மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவது கண்டனத்துக்குரியது என்றும் அவர் விமர்சித்தார்.

இதற்கிடையில், உதயநிதி ஸ்டாலின் ஒரு திருமண நிகழ்வில் பேசுகையில், “சோபா வந்தவுடன் சிலர் திமுகவை விட்டு சென்றுவிட்டார்கள்” என்று கூறியிருந்தார். இது தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்து வரும் இடதுசாரி கட்சிகளை மறைமுகமாகக் குறிப்பிடுவதாக பார்க்கப்பட்டது. அபாண்டமான குற்றச்சாட்டுகளை கூறுவது தவறு. அதற்கு ஆதாரத்துடன் பேச வேண்டும். நாங்கள் இந்த அணி அல்லது அந்த அணி கிடையாது. நாங்கள் இடதுசாரி அணி என்று உதயநிதியின் பேச்சுக்கு பதிலளித்தார் சண்முகம்.
இதையும் படிங்க: விரைவில் தேர்தல் என மு.க.ஸ்டாலின் பேசியதன் பின்னணி இதுதான்! தவெக ஆட்சியை கவிழ்க்க சதி! சி.பி.எம். சண்முகம் விளாசல்!
தொடர்ந்து பேசிய சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தவெக அரசுக்கு அளித்து வரும் ஆதரவு முழுமையாக அரசியல் அடிப்படையிலானது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறுவது கண்டிக்கத்தக்கது என்றார். தேர்தலில் வெற்றி பெற்று சீக்கிரத்தில் பதவி விலகி வேறு கட்சியில் இணைவது ஆரோக்கியமான ஜனநாயக நடைமுறை அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: "திடீரென முதல்வரை சந்தித்த கம்யூனிஸ்ட் தலைவர்கள்"..! விஜயிடம் பேசியது என்ன..? பரபரப்பு பேட்டி..!!