இந்தியாவில் மொபைல் போன் பயன்படுத்தும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த 3 முதல் 4 மாதங்களுக்குள் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் மீண்டும் உயர வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்டுள்ள சந்தை மாற்றங்கள் மற்றும் நிறுவனங்களின் வருவாயை அதிகரிக்கும் முயற்சிகள் காரணமாக இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரக்கூடும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
ஆய்வறிக்கையின்படி, இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் தற்போது போட்டி குறைந்து, முக்கிய நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால் கட்டணங்களை உயர்த்துவதற்கான சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக அடுத்த சில மாதங்களில் மொபைல் சேவைகளுக்கான ரீசார்ஜ் கட்டணங்கள் 12 முதல் 15 சதவீதம் வரை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 2ஜி சேவையை பயன்படுத்தி வந்த பலரும் தற்போது 4ஜி மற்றும் 5ஜி சேவைகளுக்கு மாறி வருவதால், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சராசரி வருவாய் தொடர்ந்து அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒன்றுக்கு மூன்றாக வசூலிப்போம்!! பொதுசொத்துகள் சேதம்?! மேற்குவங்க பாஜக அரசு வார்னிங்!

அதேபோல், போஸ்ட்பெய்ட் இணைப்புகளை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவதால், ஜூன் காலாண்டில் ஒரு பயனருக்கான சராசரி வருவாய் 1 முதல் 1.5 சதவீதம் வரை அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தை பங்கீட்டிலும் முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து வளர்ச்சி பெறும் என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள், வோடபோன் ஐடியா நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை அதிகளவில் தங்கள் பக்கம் ஈர்க்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்த காலாண்டில் சுமார் 70 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கும் என்றும், பார்தி ஏர்டெல் சுமார் 50 லட்சம் புதிய இணைப்புகளை பெறும் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.
மறுபுறம், வோடபோன் ஐடியா நிறுவனத்தின் வாடிக்கையாளர் வளர்ச்சி மிகவும் குறைவாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் சுமார் 2 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை மட்டுமே சேர்க்கும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மொத்தத்தில், தொலைத்தொடர்பு துறையில் ஏற்படும் இந்த மாற்றங்கள் காரணமாக, வரும் மாதங்களில் மொபைல் சேவைகளுக்காக வாடிக்கையாளர்கள் கூடுதல் செலவு செய்ய வேண்டிய சூழல் உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: கணவரை கொன்று புதைத்து நாடகமாடிய மனைவி! குளியலறையில் கிடைத்தது சடலம்!