சென்னை: பட்டினம்பாக்கம் பகுதியில் தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என்றும் கூறிய அவர், மக்களின் வரிப்பணத்தை இதுபோன்ற திட்டத்துக்கு செலவிட வேண்டுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்றும், கட்சி தொடர்ந்து நிலைத்து நிற்கும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டம் தொடர்பாக அவர் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
இதையும் படிங்க: ரீல்ஸ் அரசியலில் இருந்து தமிழகத்தை விடுவிப்போம்! அண்ணாயிசம் ஆட்சியை மீண்டும் நிறுவுவோம்! இபிஎஸ் சபதம்!
லூப் சாலை மற்றும் சாந்தோம் பகுதியில் ஏராளமான பள்ளிகள் இருப்பதாகவும், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அந்தப் பகுதிகளில் பயின்று வருவதாகவும் ஜெயக்குமார் கூறினார்.

ஏற்கனவே கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவும் பகுதியில் சுமார் ரூ.1,200 கோடி செலவில் தலைமைச் செயலகம் அமைப்பது தேவையா என்றும் கேள்வி எழுப்பினார்.
பல பள்ளிகளில் குடிநீர் வசதிக்கே இன்னும் சிக்கல் உள்ள நிலையில், மக்களின் வரிப்பணத்தை அவர்களுக்கு நேரடியாக பயனளிக்கும் திட்டங்களுக்கு செலவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்தார்.
சென்னை புறநகர் பகுதியில் தலைமைச் செயலகம், அமைச்சர்கள் குடியிருப்பு, எம்.எல்.ஏ. விடுதி உள்ளிட்ட அரசு கட்டிடங்களை ஒருங்கிணைந்த வளாகமாக அமைக்கலாம் என்றும் ஜெயக்குமார் யோசனை தெரிவித்தார்.
தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு குறித்தும் அவர் அரசை விமர்சித்தார். உச்சபட்ச மின்தேவையை பூர்த்தி செய்வது அரசின் கடமை என்றும், தேவையான அளவு மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
இறுதியாக தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகள் அதிமுகவின் தொகுதிகள் என்றும், மக்களின் ஆதரவுடன் அங்கு அதிமுக வெற்றி பெறும் என்றும் டி.ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: 2 தொகுதியிலும் அதிமுக தான் வெல்லும்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நம்பிக்கை!