சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெண்களை மொட்டை அடிக்க வைத்து மோசடி செய்த நபரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கொத்தாம்பாடி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு செல்போன் மூலம் அழைப்பு வந்தது. அழைப்பில் பேசிய நபர் தன்னை வட்டாட்சியர் அலுவலகத்தைச் சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதைத் தடுக்க சில நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகக் கூறினார். அதன் ஒரு பகுதியாக, மொட்டை அடித்துக் கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆண்களுக்கு 6,000 ரூபாயும், பெண்களுக்கு 15,000 ரூபாயும் வழங்கப்படும் என்று அந்த நபர் கூறியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். மேலும், இந்தத் திட்டத்தின் உண்மையை நிரூபிப்பதற்காக ஏற்கனவே சில பெண்கள் மொட்டை அடித்தது போன்ற புகைப்படங்களையும் அவர் வாட்ஸ்அப்பில் அனுப்பினார். இதை நம்பிய சிலர், மொட்டை அடிக்க தயாராக இருந்தனர்.இந்த மோசடியில் மொத்தம் 20 பேர் வரை ஏமாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அவர்களில் மூன்று பெண்கள் ஏற்கனவே மொட்டை அடித்துவிட்டனர். பணம் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். பின்னர் அந்த நபரை மீண்டும் தொடர்பு கொண்டபோது, அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அப்போதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அவர்கள் உணர்ந்தனர்.இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: 50+ பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த தவெக பிரமுகர் மீண்டும் கைது... ஜாமீனில் வெளியே வந்தவரை தட்டித்தூக்கிய போலீஸ்...!
உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மோசடி செய்த நபரை கண்டுபிடிக்க காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மொபைல் எண் மற்றும் பிற தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.இது போன்ற மோசடிகளில் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். அரசு சார்பில் வரும் எந்தத் தகவலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது நேரடி தொடர்பு மூலமே உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: #BREAKING சேலத்தில் பயங்கரம்... தனியாக வசித்து வந்த முதிய தம்பதி நகைக்காக அடித்துக்கொலை...!