புதுடில்லி: நாட்டின் அதிகார மையமாக கருதப்படும் டெல்லியின் லுத்யன்ஸ் பகுதியில் உள்ள அரசு பங்களாக்களின் பராமரிப்புக்காக மத்திய அரசு செலவிடும் தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவது தற்போது கவனம் பெற்றுள்ளது. 2025-26 நிதியாண்டில் மட்டும் இந்தப் பணிகளுக்காக ரூ.92.35 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லுத்யன்ஸ் டெல்லி பகுதியில் மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், நீதிபதிகள், முப்படைகளின் உயரதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கான அரசு குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் பல பங்களாக்கள் 80 முதல் 90 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை என்பதால், தொடர்ந்து பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் தேவைப்படுகின்றன.
தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி, இந்த அரசு பங்களாக்களை பழுதுபார்த்தல், புதுப்பித்தல் மற்றும் பராமரித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக 2014-15 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில் மத்திய அரசு மொத்தம் ரூ.547.68 கோடி செலவிட்டுள்ளது.
இதையும் படிங்க: கொரோனாவை மிஞ்சுகிறதா பன்றிக் காய்ச்சல்? நீலமாகும் உதடுகள் சொல்லும் ஆபத்து என்ன?
குறிப்பாக, 2014-15ல் ரூ.27.14 கோடியாக இருந்த பராமரிப்பு செலவு, 2025-26ல் ரூ.92.35 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது சுமார் 12 ஆண்டுகளில் செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது.

பழைய கட்டடங்களில் ஏற்படும் நீர்க்கசிவு, கரையான் பாதிப்பு, பழமையான மின்சார அமைப்புகள், பிளம்பிங் பிரச்னைகள் உள்ளிட்டவை பராமரிப்பு செலவு அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. சில பழைய பங்களாக்களை இடித்து புதிதாக கட்டுவது தொடர்பான திட்டங்கள் கடந்த காலங்களில் பரிசீலிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
மத்திய அமைச்சரவையில் சுமார் 70 முதல் 72 அமைச்சர்கள் உள்ள நிலையில், கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.92.35 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதன்படி கணக்கிட்டால், ஒரு பங்களாவுக்கு சராசரியாக சுமார் ரூ.1.2 கோடி வரை பராமரிப்பு செலவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நூற்றாண்டை நெருங்கும் பழமையான அரசு குடியிருப்புகளை தொடர்ந்து பராமரிப்பதற்கான செலவு அதிகரித்து வருவது ஒருபுறம் இருந்தாலும், இவ்வளவு பெரிய தொகை எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது குறித்த விவாதமும் தற்போது எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ரூ.5 கோடி அபராதம் ரத்து! யமுனை விழா வழக்கில் வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு வெற்றி!