திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று (ஜூலை 28) பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொண்டு, முனைவர் பட்டம் மற்றும் தங்கப் பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு நேரடியாக பட்டங்களை வழங்க இருக்கிறார். மொத்தம் சுமார் 37,877 மாணவர்கள் பட்டம் பெறத் தகுதி பெற்றிருந்த நிலையில், அவர்களில் 871 பேருக்கு ஆளுநர் கையால் பட்டம் வழங்கப்பட உள்ளது.
விழாவின் தொடக்கத்தில் பாடப்படும் பாடல்களின் வரிசை குறித்து ஆளுநர் மாளிகையிலிருந்து வழங்கப்பட்ட சுற்றறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்படி, முதலில் வந்தே மாதரம், அடுத்து தேசிய கீதம், மூன்றாவதாகத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் என். சந்திரசேகர் இதை உறுதிப்படுத்தினார். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடம் அளிக்கப்பட்டதை அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் கண்டித்தனர்.

இதையொட்டி, உயர்கல்வித்துறை அமைச்சர் பி. விஸ்வநாதன் விழாவைப் புறக்கணிப்பதாக அறிவித்தார். நெல்லை மற்றும் கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.க்களும் ஆளுநர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. முனைவர் பட்டம் பெற இருந்த தமிழக காவல்துறை சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வாலும் விழாவில் பங்கேற்கவில்லை என்ற செய்தி பரவியது.
இதையும் படிங்க: பழனி நில மோசடியில் சிபிசிஐடி அடுத்த அடி... 2வது நாளாக முக்கிய நபரிடம் கிடுக்குப்பிடி விசாரணை...!
ஆனால், டி.ஜி.பி. தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. காவல்துறை ஆலோசனைக் கூட்டம் மற்றும் அலுவலகப் பணிச்சுமை காரணமாகவே அவரால் கலந்துகொள்ள முடியவில்லை என்றும், ஆளுநர் விழாவைப் புறக்கணிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அவர் கிரிமினாலஜி துறையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற இருந்தார்.
பாடல்கள் வரிசை தொடர்பான சர்ச்சை மற்றும் சில முக்கியப் பிரமுகர்கள் விலகியதால் விழா சூழல் பதற்றமாக இருந்தது.
இதையும் படிங்க: எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் முடங்கிய நாடாளுமன்றம்.. 2 மணி வரை ஒத்திவைப்பு..!!