பெங்களூரு: கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார், தொழிலதிபர் கவுதம் அதானியை நேரில் சந்தித்து பேசிய சம்பவம், கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி அதானி குழுமத்தையும், மத்திய அரசையும் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், முதல்வர் சிவகுமார் அதானியை சந்தித்திருப்பது தற்போது அரசியல் விவாதமாகியுள்ளது.
பெங்களூருவில் உள்ள முதல்வர் சிவகுமாரின் இல்லத்திற்கு நேற்று காலை சென்ற அதானி, அவரை சுமார் 30 நிமிடங்கள் சந்தித்து பேசினார். பெங்களூருவின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.22,267 கோடி மதிப்பில் 16.75 கி.மீ. நீளத்திற்கு இரட்டை சுரங்கப் பாதை அமைக்கும் திட்டத்தின் ஒப்பந்தத்தை அதானி குழுமம் பெற்றுள்ள சூழலில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதானி தன்னை சந்திக்க நேரம் கேட்டதாகவும், மரியாதை நிமித்தமாகவே இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் முதல்வர் சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார். மேலும், வேறு எந்த முக்கிய விவகாரமும் இருவருக்கும் இடையே விவாதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மேகதாது அணை! தமிழகம்-கர்நாடகா தண்ணீர் பிரச்சினை! சென்னையில் டி.கே.சிவக்குமார் பதில்!

ஆனால், இந்த விளக்கம் பாஜகவினரின் விமர்சனத்தை தடுக்கவில்லை. கர்நாடக பாஜக தலைவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா, சிவகுமாரை கடுமையாக விமர்சித்துள்ளார். அதானியை சந்திக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் சிவகுமார் அனுமதி பெற்றுவிட்டாரா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய அளவில் அதானியை காங்கிரஸ் எதிர்த்து வரும் நிலையில், கர்நாடகாவில் அதே குழுமத்துடன் அரசு நெருக்கமாக செயல்படுவது இரட்டை நிலைப்பாட்டை காட்டுவதாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
கர்நாடகாவில் அதானி குழுமம் பல்வேறு திட்டங்களில் ஈடுபட்டுள்ள நிலையில், முதல்வர் பதவியேற்ற பிறகு சிவகுமார் அதானியை நேரில் சந்தித்திருப்பது காங்கிரஸ் கட்சிக்குள்ளும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு வெறும் மரியாதை நிமித்தமானதா அல்லது அரசின் முக்கிய திட்டங்கள் தொடர்பான பின்னணி பேச்சுவார்த்தையா என்பதே தற்போது எழுந்துள்ள முக்கிய கேள்வியாக உள்ளது.
இதையும் படிங்க: ராகுல் நிகழ்ச்சியை பிரபலப்படுத்த ரூ.25 ஆயிரம்!! இன்புளூயன்சர்களுக்கு பணம் கொடுத்ததா காங்.,? பாஜக புகார்!