அதிமுக முன்னாள் அமைச்சரும், கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தமிழக அரசியலில் புதிய விவாதம் எழுந்துள்ளது. அவர் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
தனது சமூக வலைதள அறிக்கையில் உதயநிதி ஸ்டாலின், “மற்றொரு நாள், மற்றுமொரு ராஜினாமா” என்று குறிப்பிட்டு, தற்போதைய ஆட்சி அமைந்த பிறகு அதிமுகவைச் சேர்ந்த ஆறாவது எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது ஆளுங்கட்சியின் அரசியல் அணுகுமுறையை வெளிப்படுத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கூட்டணி கட்சிகள் மீது முழு நம்பிக்கை இல்லாததால்தான் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சி நடைபெறுகிறது என்று உதயநிதி குற்றம்சாட்டியுள்ளார். மக்களின் வாக்கால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கட்சி மாறச் செய்வது ஜனநாயகத்திற்கு எதிரான செயலாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்! திமுகவினர் கைது! கோவத்தில் கொந்தளித்த மு.க.ஸ்டாலின்!!

மேலும், “தொட மாட்டேன், தொட்டால் விட மாட்டேன்” என்று தேர்தல் காலத்தில் பேசிய முதலமைச்சர், தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியதாக கூறப்படும் ஒருவரை தனது கட்சியில் சேர்க்க முயற்சிப்பது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். இந்த நடவடிக்கையை “வாஷிங் மெஷின் அரசியல்” என்று விமர்சித்துள்ள அவர், மக்கள் அனைத்தையும் கவனித்து வருகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
எம்.ஆர். விஜயபாஸ்கர் ராஜினாமாவால் சம்பந்தப்பட்ட தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகலாம் என்றும், அந்த தேர்தலின் மூலம் மக்கள் தங்களின் தீர்ப்பை வழங்குவார்கள் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எம்.ஆர். விஜயபாஸ்கர் விரைவில் தவெகவில் இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், அவரது ராஜினாமாவும், அதனைத் தொடர்ந்து எழுந்துள்ள அரசியல் விமர்சனங்களும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சி தரப்பில் வெளியாகும் அடுத்தகட்ட விளக்கத்துக்கு அரசியல் வட்டாரங்கள் கவனம் செலுத்தி வருகின்றன.
இதையும் படிங்க: போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது..!! தவெக அரசை சாடிய கனிமொழி எம்.பி..!!