தொடர் கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளனர்.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புதன்கிழமையன்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து அதே பகுதியில் நிலவி வருவதாக வானிலை மையம் கூறியுள்ளது.
இதையும் படிங்க: கனமழை எச்சரிக்கை எதிரொலி... கண்காணிப்பை பலப்படுத்திய அரசு..! மிஸ் ஆகவே கூடாது...!
இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், அதற்கடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுவடையலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் நேற்று பிற்பகலில் தொடங்கிய கனமழை இரவிலும் நீடித்ததது. குறிப்பாக தாமிரபரணி ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதிகளான திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் இரு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து நேற்றே அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்தனர்.
அதே போல் தூத்துக்குடிக்கும் கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று ஒரு நாள், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது தொடர் கனமழை காரணமாக ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நேற்று இரவு முதலே மழை தொடர்ந்து வருவதால் புதுக்கோட்டை, திருச்சி, மயிலாடுதுறை, விருதுநகர், தஞ்சாவூர், சிவகங்கை, கரூர், நாகை, அரியலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சுழற்றி அடிக்க போகுது... வங்கக்கடலில் காற்றழுத்த பகுதி... இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...!