உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க், தன் மீது தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வரும் இனவெறி குற்றச்சாட்டுகளை மறுத்து விளக்கம் அளித்துள்ளார். தனது குடும்பப் பின்னணி மற்றும் நிறுவனங்களில் நிலவும் பணியாளர் பல்வகைத் தன்மையை எடுத்துக்காட்டி, தாம் இனவெறியை ஆதரிப்பவர் அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் (X), டெஸ்லா (Tesla), ஸ்டார்லிங்க் (Starlink), ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) உள்ளிட்ட பல நிறுவனங்களின் தலைவராக உள்ள எலான் மஸ்க், கடந்த சில ஆண்டுகளாக குடியேற்றக் கொள்கைகள் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து வெளியிட்ட கருத்துகளால் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார். குறிப்பாக, சட்டவிரோத குடியேற்றம் குறித்து அவர் தெரிவித்த கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு, சில தரப்பினர் அவர் மீது இனவெறி மற்றும் வலதுசாரி சிந்தனையை ஆதரிப்பதாக குற்றம்சாட்டி வந்தனர்.
இந்த நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், தனது மனைவி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும், அவர்களுக்கு நான்கு குழந்தைகள் இருப்பதாகவும் கூறினார். மேலும், தனது குழந்தைகளில் ஒருவருக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி சுப்பிரமணியன் சந்திரசேகரை நினைவுகூரும் வகையில் "ஸ்டிரைடர் சேகர்" (Strider Sekhar) என்ற பெயரை வைத்துள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு பேரிடி! சரிந்தது பங்குகள்! டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!

இதனை சுட்டிக்காட்டிய அவர், இப்படிப்பட்ட குடும்பப் பின்னணி கொண்ட தன்னை இனவெறியை ஆதரிப்பவர் என்று கூறுவது உண்மைக்கு புறம்பானது என்றார். மேலும், தன் நிறுவனங்களில் உலகின் பல்வேறு நாடுகள் மற்றும் பல இனங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருவதாகவும், பணியிடங்களில் இன அடிப்படையிலான பாகுபாட்டுக்கு இடமில்லை என்றும் விளக்கம் அளித்தார்.
எலான் மஸ்கின் இந்தக் கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. அவரது ஆதரவாளர்கள், குடும்பத்தை எடுத்துக்காட்டி அளித்த இந்த விளக்கம் முக்கியமானது என்று கூறி வருகிறார்கள். அதே நேரத்தில், விமர்சகர்கள் ஒருவர் இனவெறியாளர் தானா என்பதை அவரது குடும்பப் பின்னணி மட்டுமே தீர்மானிக்காது என்றும், அவரது பொது கருத்துகள் மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில்தான் மதிப்பிட வேண்டும் என்றும் வாதிடுகின்றனர்.
எலான் மஸ்கின் இந்த விளக்கம் உலக அரசியல் மற்றும் சமூக ஊடக வட்டாரங்களில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. இனவெறி, குடியேற்றக் கொள்கை மற்றும் சமூக பொறுப்பு போன்ற அம்சங்கள் மீண்டும் சர்வதேச அளவில் கவனம் பெறும் சூழல் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி!" – ஐ.நா.வில் இந்தியா கடும் பதிலடி